சர்வதேச யோகா தினம்.. டெல்லியில் குடியரசுத் தலைவர் .. ஸ்ரீநகரில் பிரதமர் மோடி.. பங்கேற்பு!

Manjula Devi
Jun 21, 2024,10:43 AM IST

ஸ்ரீநகர்: 10வது சர்வதேச யோகா தினம் இன்று கொண்டாடப்பட்டது. குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு டெல்லியில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அதேபோல ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைநகர் ஸ்ரீ நகரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.


ஒவ்வொரு வருடமும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடம் பத்தாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது.யோகா என்ற வார்த்தையை சமஸ்கிருத மொழியில் இருந்து தோற்றுவித்தது. அதாவது தமிழில் யோகா என்பது சேர்தல் அல்லது ஒருங்கிணைத்தல் என்பது பொருள். அதாவது மனம் மற்றும் உடலை ஒருங்கிணைத்து ஆரோக்கியத்தை பெறுவதற்கான வழியாகும். அதே நேரத்தில் டென்ஷன் என சொல்லக்கூடிய மன அழுத்தத்தை போக்கக்கூடிய சிறந்த நிவாரணி யோகா.




யோகாசனம், தியானம் போன்றவற்றை முறையாக செய்யும் போது, ஒரு தனிநபரின் உடல்நலம் மற்றும் மன அமைதியை மேம்படுத்துகிறது. இதனால் மக்கள் நோய் நொடி இன்றி ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான அஸ்திவாரமாக யோகா திகழ்கிறது. இன்றைய நவநாகரீக காலத்தில் மக்கள் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களும் மாறி உள்ளது. இதனால் மக்கள் பல்வேறு உடல் உபாதைகளை சந்தித்து வருகின்றனர். இதனைத் தவிர்த்து மக்கள் உடல் மற்றும் மன வலிமையை மேம்படுத்தி, ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதன் மூலம் உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது.


சர்வதேச யோகா தினத்தை கொண்டாட செப்டம்பர் 27, 2014ஆம் ஆண்டு ஐநா சபையில் பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்தார். இதனை தொடர்ந்து டிசம்பர் 11, 2014 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத்  அடுத்து, ஆண்டுதோறும் ஜூன் 21 அன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடபட்டு வருகிறது. 


இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் தலைநகர் ஸ்ரீ நகரில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார்.இதில் ஆளுநர் மனோஜ் சின்ஹா, மத்திய ஆயுஷ் துறை இணையமைச்சர் பிரதாப்ராவ் கன்பத்ராவ் ஜாதவ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர் .




இது தவிர டெல்லியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான யோகா சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 550 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட பணியாளர்கள், மாணவர்கள், என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 


ஒவ்வொரு வருடமும் மக்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி யோகா நிகழ்ச்சியில் பங்கேற்று யோகா செய்யும் வீடியோவை வெளியிட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் என்பது நினைவிருக்கலாம்.