இடைக்கால ஜாமீன் முடிந்தது.. மீண்டும் திகார் சிறையில் அடைக்கப்பட்டார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்!

Su.tha Arivalagan
Jun 02, 2024,05:42 PM IST

டில்லி : மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு  இடைக்கால ஜாமீனில் விடுதலையான டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இன்று மாலை மீண்டும் திகார் சிறையில் சரணடைந்தார். 


டில்லி முதல்வரும் ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். உடல்நிலை உள்ளிட்ட பல காரணங்களை சொல்லியம் இவருக்கு ஆரம்பத்தில் தொடர் பலமுறை ஜாமின் மறுக்கப்பட்டது. பிறகு கடந்த மாதம் ஜாமின் வழங்கி, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.




தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடலாம், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளித்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை எழுப்பிய ஆட்சேபனையையும் அது நிராகரித்தது. இதையடுத்து அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் கெஜ்ரிவால் ஈடுபட்டார். அவரது பிரச்சாரம் பெரும் தாக்கத்தையும் வட இந்தியாவில் ஏற்படுத்தியது. 


இந்நிலையில் ஜூன் 02ம் தேதியான இன்று மாலையுடன் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமின் காலம் நிறைவடைந்தது. இதனால் காலையிலேயே வீட்டில் தனது பெற்றோரிடம் ஆசி பெற்று, வீட்டில் இருந்து கிளம்பிய கெஜ்ரிவால், தனது மனைவி சுனிதா கெஜ்ரிவால் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் மகாத்மா காந்தியின் நினைவிடம் அமைந்துள்ள ராஜ் கோட்டிற்கு சென்று மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அனுமன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். 


காலை முதல் இப்படி பல இடங்களுக்கும் சென்று வந்த அரவிந்த் கெஜ்ரிவால் இன்று மாலை மீண்டும் திகார் சிறைக்கு சென்று சரணடைந்தார். கெஜ்ரிவால்  சென்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. முன்னதாக கெஜ்ரிவால் வெளியிட்ட ஒரு செய்தியில், தான் மீண்டும் சிறைக்குப் போகப் போவதாகவும், அங்கு தான் மீண்டும் சித்திரவதைக்குள்ளாக்கப்படலாம் என்றும் தெரிவித்திருந்தார். அவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து விட்டதால் வேறு வழியில்லாமல் மீண்டும் சிறைக்குத் திரும்பியுள்ளார் கெஜ்ரிவால் என்பது குறிப்பிடத்தக்கது.