300 அடி உயரத்தில் ரீல்ஸ்.. தவறி விழுந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்.. கும்பே அருவியில் விபரீதம்!

Manjula Devi
Jul 18, 2024,01:20 PM IST

மும்பை:   மகாராஷ்டிர மாநிலம் கும்பே அருவிக்கு சுற்றுலா சென்ற இன்ஸ்டாகிராம் பிரபலம் அன்வி காம்தார் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கும் போது 300 அடி பள்ளத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். இவருடைய உயிரிழப்பு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இன்ஸ்டா ரீல்ஸ்களின் மூலம் மிகவும் பிரபலமானவர்  இளம் பெண் அன்வி காம்தர்.  இவருக்கு வயது 27. இவர் எப்போதுமே சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர். இதுவரை இன்ஸ்டாவில் இவருக்கு 2 லட்சத்திற்கும் அதிகமான பாலோவர்ஸ்கள் உள்ளனர். இதனால் இவர் ரசிகர்களை கவரும் விதமாக பல்வேறு இடங்களுக்கு பயணம் சென்று  வித்தியாசமாக ரீல் செய்து அதனை வீடியோவாக  இன்ஸ்டாவில் அப்டேட் செய்வது வழக்கம். 




அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட் பகுதியில் உள்ள கும்பே அருவிக்கு சென்றுள்ளார். இந்த அருவி இயற்கை எழில் சூழ கண்களுக்கு குளிர்ச்சியாக அழகாக இருக்கும்.  வாரிசு படத்தில் ஓபனிங் காட்சியில் நடிகர் விஜய் ஓப்பனிங் காட்சியில் வருவாரே அது இந்த இடம்தான். இந்த படத்திற்குப் பிறகு தான் இந்தியாவில் இப்படி ஒரு அழகான அருவி உள்ளதே பலருக்கும் தெரிய வந்தது. இதன் பின்னர் கும்பே அருவி மிகவும் பிரபலமானது. இந்த அருவி எங்கு இருக்கிறது என பலரும் விவாதிக்கத் தொடங்கினர்.


இந்த பகுதியில்தான் அன்வி காம்தார் ரீல் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக 300 அடி பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனை அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அன்வி காம்தாரை தேடினர். இந்த தேடல் சுமார் ஆறு மணி நேரமாக நீடித்து. அதன் பின்னர் பலத்த காயங்களுடன் பள்ளத்திலிருந்து மீட்கப்பட்டார் காம்தார்.




சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பாதி வழியே அவரின் உயர் பிரிந்தது. ரீல்ஸ் எடுக்கப் போன  இடத்தில் கீழே விழுந்து இப்படி அன்வி காம்தார் உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுபோல ஆபத்தான விபரீத ரீல்ஸ்களை எடுக்கக் கூடாது என பலமுறை அரசு பரிந்துரை செய்தும் இளம் தலைமுறையினர்கள் இதுபோன்று செய்து தான் வருகின்றனர். இதன் விளைவு எவ்வளவு கொடுத்தாலும் ஈடு இணையாகாத உயிர் ஒன்று மட்டுமே. இதனால் உங்களின் பெற்றோர்களையும், கனவு வாழ்க்கையையும் கருத்தில் கொண்டு இனிமேலாவது இது போன்ற விபரீத விளையாட்டுகளை செய்யாமல் விழிப்புடன் இருங்கள் இளம் தலைமுறையினர்களே..!