78 வயசாய்ருச்சு.. இனிமே அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போறேன்.. இன்போசிஸ் நாராயணமூர்த்தி

Su.tha Arivalagan
Jan 27, 2024,06:50 PM IST

டெல்லி: அரசியலில் சேரும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு, எனக்கு 78 வயதாகி விட்டது. இனிமேல் அதெல்லாம் எனக்கு சரிவராது. எனது பிள்ளைகளுடன், பேரக் குழந்தைகளுடன் நேரம் செலவிடவே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் இன்போசிஸ் நிறுவனர் என். ஆர்.நாராயணமூர்த்தி.


இன்போசிஸ் நிறுவனத்தை உருவாக்கியவர் நாராயணமூர்த்தி. இந்தியாவில் ஐடி புரட்சியை ஏற்படுத்திய முன்னோடிகளில் நாராயணமூர்த்தியும் ஒருவர். தற்போது 78 வயதாகும் என்.ஆர். நாராயணமூர்த்தி அவ்வப்போது ஏதாவது பரபரப்பான கருத்தை வெளியிடுவது வழக்கம்.


ஐடி ஊழியர்களின் வேலை நேரம் குறித்து அவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது. வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இதற்கு பலரும் அவரது கூற்றை கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் என்டிடிவிக்கு அவர் ஒரு பேட்டி அளித்துள்ளார்.




அரசியலில் ஈடுபடும் திட்டம் உள்ளதா என்ற கேள்விக்கு நாராயணமூர்த்தி பதில் தருகையில், 78 வயதில் எந்த பொறுப்பையும் சுமக்க முடியாது. எனவே அப்படி ஒரு திட்டம் என்னிடம் இல்லை. இப்போது எனது பிள்ளைகளுடன், பேரப் பிள்ளைகளுடன் நேரம் செலவிடவே விரும்புகிறேன். இசையை ரசிக்க விரும்புகிறேன். நிறைய படிக்க விரும்புகிறேன்.


இது பேரப் பிள்ளைகளுடன் நேரத்தை செலவிட்டு பொழுது போக்குவதற்கான வயது. இப்போதுதான் படிப்பதற்கும் நிறைய நேரம் கிடைக்கும். பிசிக்ஸ், கணிதம், பிலாசபி, பொருளாதாரம் என பல தலைப்புகளில் படிக்க விரும்புகிறேன் என்றார்  நாராயணமூர்த்தி.


நாராயணமூர்த்தியின் மனைவி சுதாவும், தான் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

அவர் கூறுகையில்,  நான் நிறைய பொதுச் சேவை செய்து விட்டேன். நிறைய பேருக்கு உதவியுள்ளேன். 14 தேசியப் பேரிடர் காலங்களில் பலருக்கு உதவியுள்ளேன். ஒரு கொரோனா பேரிடரையும் பார்த்து விட்டேன். பொது மக்களுக்கு எப்போதுமே நான் ஏதாவது செய்து கொண்டேதான் இருக்கிறேன். அதற்காக ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டுதான் செய்ய வேண்டும் என்று இல்லை. இப்படி இருப்பதையே மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்றார் சுதா மூர்த்தி.


நாராயணமூர்த்தி - சுதா மூர்த்தி மருமகன்தான் இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் என்பது நினைவிருக்கலாம்.