மக்கள் தொகை பெருகிட்டே போகுது.. யாருக்குமே அக்கறை இல்லை.. என். ஆர். நாராயணமூர்த்தி கண்டனம்!

Su.tha Arivalagan
Aug 19, 2024,06:20 PM IST

டெல்லி:   நாட்டில் அவசர நிலை பிரகடனத்திற்குப் பிறகு, மக்கள் தொகை குறைப்பு குறித்து யாருமே அக்கறை காட்டாமல் உள்ளனர். நாட்டின் மக்கள் தொகை கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது என்று இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர். நாராயணமூர்த்தி கூறியுள்ளார்.


பிரக்யாராஜ் நகரில் நடந்த மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசும்போது இவ்வாறு கூறினார் நாராயணமூர்த்தி. அவரது பேச்சிலிருந்து சில துளிகள்:




மக்கள் தொகைப் பெருக்கத்தால் பல்வேறு சவால்களை நாடு சந்தித்து வருகிறது. ஒவ்வொருவருக்கும் சுகாதார வசதிகளை ஏற்படுத்துவது, வீட்டு வசதி என எல்லாவற்றிலுமே நமக்கு சவால்கள் அதிகரித்து வருகின்றன.


அவசர நிலை பிரகடனத்திற்குப் பிறகு இந்திய மக்கள், மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து அக்கறை காட்டாமல் உள்ளோம். இது நாட்டின் வளர்ச்சிக்கும் பெரும் குந்தகம் ஏற்படுத்துகிறது. அதேசமயம், அமெரிக்கா, பிரேசில், சீனா போன்ற நாடுகளில் மக்கள் தொகைப் பெருக்கம் சிறப்பான முறையில் கையாளப்பட்டுள்ளது.


நாட்டின் வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமாக உதவுவதுதான் பொறுப்பானவர்களின் முக்கியக் கடமை. இதை கனவாகக் கொண்டு லட்சியத்துடன் செயல்பட வேண்டும். கனவு நனவாக உழைக்க வேண்டும்.


நமது தலைமுறையினர் அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு பல்வேறு தியாகங்களைச் செய்ய வேண்டும்.எனது பெற்றோர், எனது பிள்ளைகள், ஆசிரியர்கள் பல தியாகங்களைச் செய்தேன். அதுதான் என்னை இந்த இடத்தில் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. அதுபோலத்தான் நாமும் செய்ய வேண்டும் என்றார் நாராயணமூர்த்தி.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்