மாதத்திற்கு 10 நாளாவது ஆபீஸுக்கு வாங்கப்பா.. ஊழியர்களுக்கு உத்தரவிட்ட இன்போசிஸ்!

Su.tha Arivalagan
Mar 06, 2025,05:09 PM IST

பெங்களூரு: நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனம் தனது ஊழியர்களை மாதத்திற்கு குறைந்தது 10 நாட்களாவது ஆபீஸுக்கு வந்து பணியாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


ஒர்க் பிரம் ஹோம் நாட்களைக் குறைக்க வேண்டும் என்றும், அலுவலகத்திற்கு வருவதை அதிகரிக்க வேண்டும் என்றும் தனது அனைத்துப் பிரிவு  தலைமை மூலமாக உத்தரவிட்டுள்ளது இன்போசிஸ் நிறுவனம். 


தற்போது இன்போசிஸ் நிறுவனத்தில் ஹைபிரிட் எனப்படும் ஒர்க் பிரம் ஆபீஸ் மற்றும் ஹோம் ஆகிய இரு ஆப்ஷன்களும் நடைமுறையில் உள்ளன. ஆனால் பல ஊழியர்கள் அடிக்கடி ஒர்க் பிரம் ஹோம் எடுப்பதால் அலுவலகத்திற்கு வருவோர் குறைந்து வருவதாக தலைமை கருதியது. இதையடுத்தே தற்போதே மாதத்திற்கு 10 நாட்கள் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது இன்போசிஸ் நிர்வாகம்.




தற்போது வருகைப் பதிவுக்காக ஒரு செயலியை தனது ஊழியர்களுக்காக வைத்துள்ளது இன்போசிஸ். மார்ச் 10ம் தேதி முதல் இந்த செயலியில் ஒர்க் பிரம் ஹோம் ஆப்ஷன் நாட்களானது ஒதுக்கப்பட்ட நாட்கள் வரைதான் கணக்கில் வருமாம். அதற்குப் பிறகு தானாகவே அந்த ஆப்ஷன் குளோஸ் ஆகி விடும். எனவே ஊழியர்கள் அதன் பிறகு அலுவலகத்திற்கு வந்தே ஆக வேண்டும்.


புதிய நடைமுறையானது சாப்ட்வேர் என்ஜீனியர்கள், சிஸ்டம் என்ஜீனியர்கள், சீனியர் என்ஜீனியர்கள் மற்றும் கன்சல்டன்ட்ஸ் ஆகியோருக்கு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.