விஜய் சேதுபதியை உதைத்தால்.. எக்ஸ் தளத்தில் பதிவு போட்ட.. அர்ஜூன் சம்பத்துக்கு ரூ. 4000 அபராதம்!

Manjula Devi
Aug 09, 2024,05:56 PM IST

சென்னை:   நடிகர் விஜய் சேதுபதியை தாக்கினால் பரிசு தருவதாக அறிவித்தது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்துக்கு ரூ. 4000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.




பசும்பொன் முத்துராமலிங்க தேவரை பற்றி அவதூறு கருத்துக்களை பேசியதாக நடிகர் விஜய் சேதுபதி மீது இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து அவர் தனது எக்ஸ் தளத்தில் விஜய் சேதுபதியை உதைப்பவர்களுக்கு ஆயிரத்து ஒரு ரூபாய் ரொக்க பணம் பரிசாக அளிக்கப்படும் என பதிவிட்டிருந்தார்.


அர்ஜுன் சம்பத்தின் இந்த பதிவு தொடர்பாக கோவை கடைவீதி காவல் நிலைய ஆய்வாளர் கே பி சாந்தி தாமாக முன்வந்து இரண்டு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கை கடந்த ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி குற்றவியல் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டது.


இந்த வழக்கு கோவை குற்றவியல்  நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதி சந்தோஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அர்ஜுன் சம்பத் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனை அடுத்து நீதிபதி  சந்தோஷம், அர்ஜுன் சம்பத்துக்கு 4,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.