ஃபிளைட்டை பறக்க விட்டுட்டு.. அரை மணி நேரம் தூக்கம் போட்ட பைலட்டுகள்.. ஊசலாடிய "153 உயிர்கள்"!

Su.tha Arivalagan
Mar 10, 2024,06:43 PM IST

ஜகார்தா: இந்தோனேசியாவைச் சேர்ந்த படிக் ஏர் - Batik Air - விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானம் ஒன்றின் பைலட்டுகள், விமானத்தை பறக்க விட்டு விட்டு, அரை மணி நேரம் ஹாயாக தூங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுகுறித்த பரபரப்பு தகவலை கார்டியன் பத்திரிகை வெளியிட்டுள்ளது. பைலட் தூங்கினால் கோ பைலட் விழித்திருக்க வேண்டும். கோ பைலட் தூங்குவதாக இருந்தால் பைலட் விழித்திருக்க வேண்டும். இதுதான் விதி. ஆனால் ஒரே நேரத்தில் இருவரும் கிட்டத்தட்ட அரை மணி நேரம் தூங்கியுள்ளனர். இதனால் விமானத்தில் இருந்த 153 பேரின் உயிரும் பெரும் ரிஸ்க்கில் இருந்துள்ளது. ஏதாவது ஒரு சிறு தவறு நடந்திருந்தாலும் கூட மிகப் பெரிய அசம்பாவிதத்தில் போய் அது முடிந்திருக்கும்.


சம்பந்தப்பட்ட விமானமானது, தென் கிழக்கு சுலவேசியிலிருந்து ஜகார்தாவுக்கு போய்க் கொண்டிருந்தது. அந்த சமயத்தில்தான் இந்த தூக்க சம்பவம் அரங்கேறியுள்ளது.  நல்ல வேளையாக விமானத்தில் இருந்த யாருக்கும் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. 




இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. சம்பந்தப்பட்ட விமானிகள் இருவரும் நேரில் அழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டுள்ளனர். அதேபோல படிக் ஏர் நிறுவனத்திற்கும் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விமான ஊழியர்களுக்கு போதிய ஓய்வளிப்பதை படிக் ஏர் நிறுவனம் உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.


சரியான தூக்கம் மற்றும் ஓய்வு இல்லாத காரணத்தால்தான் இவ்வாறு பைலட்டும், கோ பைலட்டும் ஓடும் விமானத்தில் தூங்கியதாக தெரிய வந்துள்ளது.