பீகாருக்குப் போக வேண்டிய பயணியை ராஜஸ்தானுக்கு அனுப்பிய இன்டிகோ விமானம்!

Su.tha Arivalagan
Feb 04, 2023,11:36 AM IST
டெல்லி: பீகாருக்கு செல்ல வேண்டிய  பயணி தவறுதலாக ராஜஸ்தான் போகும் விமானத்தில் ஏறி விட்டார். விமான ஊழியர்கள் இதை கண்டுபிடிக்கத் தவறியதால் அந்த பயணி மீண்டும் வேறு விமானத்தில் பீகாருக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இதுகுறித்து தற்போது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ ) விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.



ஜனவரி 30ம் தேதி இந்தக் குழப்பம் நடந்துள்ளது.இது தற்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

நடந்தது இதுதான்!

அப்தாப் ஹுசேன் என்ற பயணி, இன்டிகோ விமானத்தில் டெல்லியிலிருந்து பாட்னா செல்வதற்காக டிக்கெட் போட்டிருந்தார். டெல்லி விமான நிலையத்திற்கு ஜனவரி 30ம் தேதி வந்த அவர் விமானத்திலும் ஏறியுள்ளார். ஆனால் அவர் தவறுதலாக உதய்ப்பூர் செல்லும் விமானத்தில் ஏறி விட்டார். இதை விமான ஊழியர்களும் கவனிக்கவில்லை.

உதய்ப்பூர் விமான நிலையம் வந்த பிறகுதான் தான் தவறான விமானத்தில் வந்து விட்டதை அறிந்தார் ஹுசேன். இதுகுறித்து உதய்ப்பூர் விமான நிலையத்தில் அவர் தகவல் கொடுக்கவே,  விமான நிலைய அதிகாரிகள் இன்டிகோ விமான நிறுவனத்தை அலர்ட் செய்தனர்.  தங்கள் பக்கம் தவறு இருப்பதை அறிந்த இன்டிகோ நிறுவனம், ஹுசேனை டெல்லிக்கு திருப்பி அனுப்பி வைத்தது. ஜனவரி  31ம் தேதி அவர் பாட்னாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விவகாரம் குறித்து டிஜிசிஏ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.  வழக்கமாக விமான நிலையத்தில் 2 இடத்தில் போர்டிங் பாஸ் செக் செய்யப்படும். இதன் மூலம் பயணிகள் சரியான விமானத்தில் செல்வது உறுதி செய்யப்படும். ஆனால் இதில்தான் இன்டிகோ விமான ஊழியர்கள் தரப்பில் தவறு நேர்ந்துள்ளது. அவர்கள் சரியாக சோதிக்காமல் விட்டதால்தான் ஹூசேன் தவறான விமானத்தில் ஏற நேரிட்டுள்ளது. இதுகுறித்து இன்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், நடந்த தவறு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. நடந்த சம்பவத்துக்காக வருந்துகிறோம் என்று கூறியுள்ளனர்.

சமீப காலமாக ஏர் இந்தியாவும், இன்டிகோவும் அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன. குறிப்பாக இன்டிகோ நிறுவனம் மூன்றாவது முறையாக சர்ச்சையில் சிக்கியுள்ளது. முதலில் கர்நாடக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா அவசர கால கதவைத் திறந்த சர்ச்சை. அதை வெளியில் சொல்லாமல் இன்டிகோ நிறுவனம் மறைத்து விட்டதாக சர்ச்சை வெடித்தது. பின்னர் இன்னொரு பயணி, அவசர கால கதவைத் திறந்து அது சர்ச்சையானது. இப்போது விமான பயணியை வேறு ஊருக்கு அனுப்பி வைத்து குழப்பியுள்ளனர்.