சென்னை டூ யாழ்ப்பாணத்திற்கு.. மேலும் ஒரு விமான சேவை.. பிற்பகலில்.. இண்டிகோ அறிவிப்பு!

Manjula Devi
Aug 06, 2024,11:56 AM IST

சென்னை:   சென்னையில் இருந்து தற்போது யாழ்ப்பாணத்திற்கு காலையில் அலையன்ஸ் விமான நிறுவனம் சேவையை வழங்கி வரும் நிலையில், தற்போது யாழ்ப்பாணம் டூ சென்னைக்கு  செப்டம்பர் 1 முதல் பிற்பகலில் இண்டிகோ நிறுவனம் தனது சேவையை வழங்கவுள்ளது. 


இலங்கை யாழ்ப்பாணம், தமிழர் பூமியாகும். ஈழத்தின் இதயமும் கூட. இருப்பினும் இப்பகுதியில் வசிக்கும் தமிழர்கள், தமிழகம் வருவதற்கு முறையான விமான சேவை இல்லாமல் இருந்தது. இந்தியாவில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு மட்டுமே  விமான சேவைகள் இயக்கப்பட்டு வந்தன. எனவே தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய யாழ்ப்பாணத்திற்கு சென்னையில் இருந்து நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என இலங்கை வாழ் தமிழர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.




இந்த கோரிக்கை ஏற்கப்பட்டு ஏர்-இந்தியா நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனம் 2019-ம் ஆண்டில் இருந்து சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவையை தொடங்கியது.  சென்னையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி காலை நேரத்தில் மட்டுமே அலையன்ஸ் ஏர் விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையிலிருந்து யாழ்பாணத்திற்கு பிற்பகலிலும் விமான சேவை தொடங்க உள்ளது.


இந்த சேவையை இண்டிகோ நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது. யாழ்ப்பாணம் டூ சென்னை இடையே புதிய விமான சேவை வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.  அதன்படி, சென்னையில் பகல் 1:55  மணிக்கு புறப்படும் விமானம், மாலை 3:10 மணிக்கு யாழ்ப்பாணத்திற்கு சென்றடையும். பின்னர் மறு மார்க்கமாக மாலை 3:55 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு மாலை 5:10 மணிக்கு சென்னை வந்தடையும். இதற்கான பயண கட்டணம் ரூபாய் 7,604 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது