Indian Street Premier league: "ஆக்டர் டூ ஓனர்".. சென்னை அணியை வாங்கினார் நடிகர் சூர்யா!

Manjula Devi
Dec 27, 2023,02:53 PM IST

சென்னை: இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியை வாங்கியுள்ளார் நடிகர் சூர்யா. இதன் மூலம் விளையாட்டு அணியின் உரிமையாளர்களாக உள்ள பிரபலங்கள் வரிசையில் சூர்யாவும் இணைந்துள்ளார்.


நடிகர் சூர்யா நடிப்பில் சிறந்தவர். அத்தோடு இல்லாமல்  சமூக சேவகரும் கூட. ஏழை மக்களுக்காக பொது சேவை செய்து வருபவர். மாணவர்களுக்கு கல்வி உதவிகளை  வழங்கி வருவதோடு மட்டுமில்லாமல் தற்போது விளையாட்டுத் துறையிலும் கால் பதித்துள்ளார்.


விளையாட்டு அணிகளின் உரிமையாளர்களாக  நடிகர்கள் திகழ்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளராக ஷாருக் கான் இருக்கிறார். பஞ்சாப் அணியின் உரிமையாளராக ப்ரீத்தி ஜிந்தா உள்ளார். இந்த நிலையில் புதிதாக இந்தியன் ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.




இந்த தொடரில் இடம் பெற்றுள்ள அணிகளை நடிகர்கள் படிப்படியாக வாங்கி வருகின்றனர்.  மும்பை அணியின் உரிமத்தை அமிதாப்பச்சன், ஹைதராபாத் அணியின் உரிமத்தை ராம் சரண், பெங்களூர் அணியின் உரிமத்தை ஹிருத்திக் ரோஷன், ஜம்மு காஷ்மீர் உரிமத்தை அக்ஷய் குமார் பெற்றுள்ள நிலையில் தற்போது சென்னை அணியின் உரிமத்தை நடிகர் சூர்யா வாங்கியுள்ளார்.


ஸ்ட்ரீட் ப்ரீமியர் லீக் (ஐ.எஸ்.பி.எல்) கிரிக்கெட் தொடர், அடுத்த ஆண்டு மார்ச் 2ஆம் தேதி தொடங்கி  9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இது 10 ஓவர்களை கொண்ட கிரிக்கெட் தொடராகும். இதில் டென்னிஸ் பந்தில்தான் வீரர்கள் விளையாடுவர். மொத்தம் 19 போட்டிகள் நடைபெற உள்ளன.


மும்பை, ஹைதராபாத், பெங்களூர், சென்னை, கொல்கத்தா மற்றும் ஸ்ரீநகர் என மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த கிரிக்கெட் தொடரின் தலைவராக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


ஒவ்வொரு அணிக்கும் ரூ. 1 கோடி வரை ஏலத்துக்காக செலவிட அனுமதி அளிக்கப்படும். வீரர்களுக்கான ஏலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24ம் தேதி நடைபெறும். குறைந்தபட்ச ஏலத் தொகை ரூ. 3 லட்சம்.  அதிகபட்ச தொகைக்கு இலக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுகுறித்து நடிகர் சூர்யா கூறுகையில், வணக்கம் சென்னை.. சென்னை அணியின் உரிமையாளராகியுள்ளேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அருமையான கிரிக்கெட்டை, விளையாட்டு பாரம்பரியத்தை உருவாக்குவோம் என்று அனைத்து கிரிக்கெட் ஆர்வலர்களுக்கும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் சூர்யா.