3 நாள் விடுமுறைக்குப் பின்.. புத்தெழுச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தை.. புதிய உச்சம்!

Meenakshi
Jun 18, 2024,12:46 PM IST

மும்பை:   சனி,ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய 3 நாட்கள் வர்த்தக விடுமுறைக்கு பிறகு பங்குச் சந்தையில் வர்த்தகம் தொடங்கியுள்ள நிலையில் பங்கு வர்த்தகம் இன்று புதிய உச்சம் தொட்டுள்ளது.


இன்றைய வர்த்தகத்தில் ஐடி துறை பங்குகளின் விலை உயர்வே வர்த்தக உயர்விற்கு முதன்மை காரணமாக இருந்து வருகிறது. இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அடுத்தடுத்து திட்டங்களைப் பெறுவது மட்டும் அல்லாமல் ஐரோப்பிய மத்திய வங்கி வட்டியைக் குறைந்தது மூலம் புதிய வர்த்தகம் வருவது அதிகரிக்கத் துவங்கியுள்ளது.




ஆசியப் பங்குச் சந்தைகளின் ஏற்றத்தைத் தொடர்ந்து, இந்தியப் பங்குச் சந்தையின் முன்னணி குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 குறியீடுகளுடன் இன்றைய வர்த்தகம் புதிய உயர்வுடன் தொடங்கியது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 95.95 புள்ளிகள் உயர்ந்து 23,561 புள்ளிகளை கடந்து வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 309 புள்ளிகள் உயர்ந்து 77,302 புள்ளிகளை கடந்தது வர்த்தகம்.


அமெரிக்கப் பங்குச்சந்தையின் சாதனை உயர்வைத் தொடர்ந்து இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறை பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் முக்கிய இடத்தை தொட்டு வருகிறது. டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ போன்ற முன்னணி ஐடி நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகப்படியான உயர்வைப் பதிவு செய்துள்ளது.


மறுபக்கம், பட்ஜெட் தயாரிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. பிரதமர் மோடி 3வது முறையாக பதவியேற்றுள்ள நிலையில் முழு பட்ஜெட் தயாரிக்கும் பணி தொடங்கியுள்ளது. இதுவும் பங்குச் சந்தையில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.