மனைவி, 2 குழந்தைகளுடன்.. காருடன் பள்ளத்துக்குள் பாய்ந்த இந்தியர்.. மீட்டுக் கைது செய்த போலீஸ்

Su.tha Arivalagan
Jan 05, 2023,07:25 AM IST

வாஷிங்டன்: மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் தனது டெஸ்லா காரை பள்ளத்தாக்கில் இறக்கிய இந்தியரை போலீஸார் மீட்டுக் கைது செய்துள்ளனர். இது தற்கொலை முயற்சியாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.


அந்த நபரின் பெயர் தர்மேஷ் படேல். கலிபோர்னியாவின் பாசதீனாவில் வசித்து வருகிறார். 41 வயதான இவர் தனது மனைவி,  இரண்டு குழந்தைகள் ( 9 வயது, 4 வயது) ஆகியோருடன் டெஸ்லா காரில் கிளம்பியுள்ளார். சான் மாடியோ கவுண்டியில்  உள்ள மலைப் பகுதிக்குச் சென்ற அவர் அங்கு காருடன் கீழே பாய்ந்துள்ளார்.


அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த போலீஸ் பட்ரோல் வாகனம் இதைப் பார்த்து விரைந்து வந்து மீட்புப் பணிகளில் இறங்கியது. ஹெலிகாப்டரும் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. காரில் இருந்த நான்கு பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


தர்மேஷ் படேல் உள்ளிட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.  தர்மேஷ் படேலை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனதும் சிறைக்கு அனுப்பப்படுவார். 


கார் விழுந்த வேகத்தில் நான்கு பேரும் உயிரிழந்திருக்க வேண்டும். ஆனால் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் அவர்கள் தப்பியுள்ளனர். கார் விழுந்த இடம் 300 அடி ஆழமான பள்ளமாகும்.  இது விபத்து அல்ல. வேண்டும் என்றே காரை பள்ளத்தில் விட்டுள்ளார் படேல் என்று கூறப்படுகிறது. ஏன் இப்படிச் செய்தார் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இரு குழந்தைகளும் சீட் பெல்ட் போட்டிருந்ததால் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.