அமெரிக்க - கனடா எல்லையைக் கடக்க முயன்ற .. இந்தியக் குடும்பம் மரணம்!

Su.tha Arivalagan
Apr 01, 2023,12:07 PM IST
மான்ட்ரீல்: அமெரிக்கா- கனடா இடையிலான எல்லையைக் கடக்கும் முயற்சியின்போது இந்தியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உள்பட 8 பேர் பரிதாபமாக மரணத்தைத் தழுவியுள்ளனர். அவர்களது உடல் ஒரு அடர்ந்த புதர்ப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இறந்த 8 பேரில் இந்தியக் குடும்பத்தினர் தவிர, ரோமானியா நாட்டுக் குடும்பமும் அடங்கும். அனைவருமே கனடா நாட்டு பாஸ்போர்ட் வைத்திருந்தனர். ஆனால் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றனர். உள்ளூரைச் சேர்ந்த மோஹாக் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபர்தான் இவர்களை படகு மூலம் அமெரிக்காவுக்குள் அனுப்ப கூட்டி வந்துள்ளார். ஆனால் படகு பாதியிலேயே கவிழ்ந்துள்ளது. இதில் 6 பேரின்  உடல்கள் முதலில் மீட்கப்பட்டன. பின்னர் மேலும் 2 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 8 பேரில் 6 பேர் பெரியவர்கள், 2 பேர் குழந்தைகள் ஆவர். 
 


கனடாவின் கியூபெக், ஓன்டாரியா, அமெரிக்காவின் நியூயார்க் இடையே, செயின்ட்  லாரன்ஸ் ஆற்றையொட்டிய பிராந்தியம் அக்வெஸஸ்னே மோஹாக் பிராந்தியமாக அறியப்படுகிறது. இந்த வழியாகத்தான் கனடாவிலிருந்து பலரும் ஆற்றின் மூலமாக உயிரைப் பணயம் வைத்து படகு சவாரி மூலம் நியூயார்க் பிராந்தியத்திற்குள் நுழைகின்றனர். இப்படி நுழைந்துதான் தற்போது இந்த 8 பேரும் பலியாகியுள்ளனர்.