வாஷிங்டன் ஹோட்டலில்.. கொடூரமாக தாக்கப்பட்டு காயமடைந்த.. இந்தியர் மரணம்!

Su.tha Arivalagan
Feb 10, 2024,05:16 PM IST

வாஷிங்டன்: வாஷிங்டனில் ஒரு ஹோட்டலில் வைத்து கொடூரமாக தாக்கப்பட்ட 41 வயதான இந்தியர், காயத்திலிருந்து மீளாமல் மரணமடைந்துள்ளார்.


அமெரிக்காவில் இந்தியர்கள் மீதும், இந்திய அமெரிக்கர்கள் மீதும் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், சமீபத்தில் வாஷிங்டனில் தாக்குதலுக்குள்ளான விவேக் தனேஜா என்ற இந்தியர் காயம் காரணமாக மரணமடைந்துள்ளார். 




விர்ஜீனியாவில வசித்து வந்த விவேக் தனேஜா, பிப்ரவரி 2ம் தேதி ஜப்பானிய உணவகம் ஒன்றில் இவர் சாப்பிடப் போயிருந்தபோது சிலருடன் இவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் விவேக்கை சரமாரியாக தாக்கினர். தரையில் தள்ளி தலையில் அடித்ததால் விவேக் படுகாயமடைந்தார்.


நினைவிழந்த நிலையில் அவரை போலீஸார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் விவேக்  தனேஜா உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  விவேக்கை தாக்கிய நபரின் சிசிடிவி படத்தை வைத்து போலீஸார் அவரைப் பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அந்த நபர் குறித்த தகவல் கொடுப்போருக்கு 25,000 டாலர் பரிசளிக்கப்படும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.


தாக்குதலில் காயமடைந்த இந்தியர் பலியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிகாகோவில் இப்படித்தான் சமீபத்தில் ஒரு இந்தியரை திருடர்கள் தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.. அவரது பெயர் சையத் மஜாஹிர் அலி. இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர். தன்னைக் காப்பாற்றுமாறு கோர் அவர் கதறி அழுதபடி வீடியோ வெளியிட்டிருந்தது நினைவிருக்கலாம்.


இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 5 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் தாக்குதலில் சிக்கி மரணமடைந்துள்ளனர். சமீர் காமத், ஷிரேயாஸ் ரெட்டி பெனிகர், நீல் ஆச்சார்யா, விவேக் சைனி, அகுல் தவான் ஆகியோரே அவர்கள்.


இந்த சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கூறுகையில், இந்த சம்பவங்களைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.