இஸ்ரேல் போரில் சிக்கிய நடிகை.. பத்திரமாக மீட்ட இந்தியா!

Su.tha Arivalagan
Oct 08, 2023,01:13 PM IST

மும்பை: இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலில் சிக்கிக் கொண்ட நடிகை நுஷ்ரத் பரூச்சா, பத்திரமாக மீட்கப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகிறார்.


இஸ்ரேல் நாட்டில் ஏராளமான இந்தியர்களும் உள்ளனர். இவர்களில்  தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் அடக்கம். ஹமாஸ் தாக்குதலில் பல இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர். சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தமிழ்நாட்டவர் உள்பட இந்தியர்கள் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறப்படுகிறது.


இந்த நிலையில் இஸ்ரேலின் ஹைபா நகரில் சர்வதேச திரைப்பட விழா நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக இந்திய நடிகை நுஷ்ரத் பரூச்சா சென்றிருந்தார். அவர் நடித்துள்ள அகேலி என்ற படம் இந்த விழாவில் திரையிடப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக அவர் சென்றிருந்தார். இப்படத்தில் இஸ்ரேல் திரைக் கலைஞர்கள் அமிர் போட்ரஸ், ஷாஹி ஹலேவி ஆகியோரும் நடித்துள்ளனர்.




திரைப்பட விழாவுக்காக போன இடத்தில் ஹமாஸ் தாக்குதல் நடக்கவே அங்கிருந்து வெளியேற  முடியாமல் சிக்கிக் கொண்டார் நுஷ்ரத். இதையடுத்து இந்தியத் தூதரகத்துக்குத் தகவல் போய் அவர்கள் உள்ளூர் காவல்துறை மற்றும் ராணுவத்தின் உதவியுடன் நுஷ்ரத்தை பத்திரமாக அந்த இடத்திலிருந்து மீட்டனர். இதையடுத்து அவர் விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தியாவுக்கான நேரடி விமானம் கிடைக்காததால் கனெக்டிங் விமானம் மூலம் அவர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.


இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், தேவையில்லாமல் வெளியில் செல்ல வேண்டாம் என்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறும், வீட்டுக்குள்ளேயே இருக்குமாறும் தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.


இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் இந்திய அரசு, இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ஏராளமான இந்தியர்கள் சமூக வலைதளங்களில் இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து கூறி வருகின்றனர் என்பது நினைவிருக்கலாம்.