2035ம் ஆண்டு ஸ்பேஸ் ஸ்டேஷன்.. 2040ல் நிலவுக்கு இந்தியர் செல்வார்.. பக்கா பிளான்!

Su.tha Arivalagan
Oct 17, 2023,05:07 PM IST
டெல்லி: இந்தியாவின் விண்வெளி ஆய்வுத் திட்டங்கள் படு வேகம் பிடித்துள்ளன. அடுத்தடுத்து அதிரடியான பல்வேறு இலக்குகளுடன் இந்திய விண்வெளித்துறை களம் காணவுள்ளது.

2035ம் ஆண்டு வாக்கில் விண்வெளியில் ஒரு விண்வெளி மையத்தை உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. அதேபோல 2040ம் ஆண்டு இந்தியாவின் விண்வெளி வீரர் நிலவுக்குச் செல்வார் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்தியஅரசு விடுத்துள்ள அறிக்கையில் இந்தியாவின் சார்பில் 2040ம் ஆண்டில் நிலவுக்கு  மனிதனை அனுப்பும் திட்டம் கையில் எடுக்கப்படும். அதேபோல பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பப்படி 2035ம் ஆண்டு வாக்கில் விண்வெளி ஆய்வு மையம் விண்ணில் நிறுவப்படும். இதுதொடர்பான  நடவடிக்கைகளை இந்திய விண்வெளித்துறை முன்னெடுக்கும்.



இந்தியாவின் சார்பில் விண்வெளியில் நிறுவப்படும் விண்வெளி ஆய்வு மையத்திற்கு பாரதிய அந்தரிக்ஷா ஸ்டேஷன் என்று பெயரிடப்படும்.  இதுதொடர்பான திட்ட வரைவு அறிக்கை விரைவில் தயாராகும்.

இதுதவிர வீனஸ் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கான திட்டங்களையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவின் தென் முனையில் சமீபத்தில் இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரும், பிரக்யான் ரோவரும் தரையிறங்கி வரலாறு படைத்தனர். ரஷ்யாவால் கூட முடியாததை இந்தியா சாதித்துக் காட்டியது. தென் நிலவில் இறங்கிய முதல் நாடு இந்தியாதான். இந்த வரலாற்று சாதனையைப் படைத்த கையோடு சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்1 விண்கலத்தை இந்தியாவின் இஸ்ரோ செலுத்தியது. 

அடுத்து ககன்யான் திட்டத்தை இந்தியா மேற்கொள்ளவுள்ளது. அதாவது விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் முன்னோட்டத் திட்டம் இது. இது வெற்றி பெற்றால் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டமும் எளிதாகும் என்பதால் இந்தியாவின் அடுத்தடுத்த விண்வெளித் திட்டங்கள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.