பத்திரிகையாளர் மீது தாக்குதல்.. காலிஸ்தான் ஆதரவாளர்கள் அட்டகாசம்.. இந்தியா கடும் கண்டனம்

Su.tha Arivalagan
Mar 26, 2023,10:21 AM IST
வாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய பத்திரிகையாளர் லலித் ஜா மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

காலிஸ்தான் ஆதரவுப் போராட்டங்கள் வெளிநாடுகளில் திடீரென வெடித்துள்ளன. வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் முன்பு காலிஸ்தான் ஆதரவாளர்கள் கூடி போராட்டம் நடத்துவதும், அவர்களை எதிர்த்து இந்தியர்கள் பதில் போராட்டம் நடத்துவதும் வாடிக்கையாகி வருகிறது.

சமீபத்தில் இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள இந்தியத் தூதரகம் முன்பு போராட்டம் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்தியதேசியக் கொடியை இறக்கி விட்டு காலிஸ்தான் கொடியை ஏற்றி அட்டூழியம் செய்தனர். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த செயலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் ஒரு இந்தியப் பத்திரிகையாளரை காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருவர் தாக்கியுள்ளனர். அவரது பெயர் லலித் ஜா. பிடிஐ செய்தி நிறுவனத்திற்காக வாஷிங்டனில் பணியாற்றி வருபவர். வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம் முன்பு காலிஸ்தான் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது அதுகுறித்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்தார் லலித் ஜா. 



அப்போது 2 போராட்டக்காரர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் ஆபாச வார்த்தைகலையும் பயன்படுத்தி வாக்குவாதம் செய்தனர். அதில் ஒருவர் வேகமாக பேசி விட்டு திரும்பியபோது அவரது கையில் இருந்த பெரிய குச்சி லலித் ஜா மீது பட்டு தாக்கியது. இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.  இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

தாக்குதல் குறித்து லலித் ஜா போட்டுள்ள டிவீட்டில்,  அதிர்ஷ்டவசமாக அமெரிக்க ரகசிய போலீஸார் என்னைக் காப்பாற்றி விட்டனர். இல்லாவிட்டால் நான் இந்த நேரம் மருத்துவமனையிலிருந்துதான் இந்த டிவீட் போட்டிருக்க வேண்டும். போராட்டக்காரர்களில் ஒருவர் தனது கையில் இருந்த குச்சியால் எனது இடது காதில் அடித்தார்.  இதையடுத்து நான் 911 அவசர தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு உதவி கோரினேன். பின்னர் சற்று தொலைவில் இருந்த ரகசிய போலீஸாரிடம் தகவல் தெரிவித்து அவர்களது உதவியை நாடி தப்பினேன் என்றார்.