பாலஸ்தீனத்திற்கு.. 6.5 டன் மருந்துகள், 32 டன் பேரிடர் நிவாரணப் பொருட்கள்.. அனுப்பியது இந்தியா!

Su.tha Arivalagan
Oct 22, 2023,02:19 PM IST

டெல்லி: போரினால் பாதிக்கப்பட்டுள்ள காஸா பகுதி மக்களுக்கு உதவுவதற்காக மருந்துப் பொருட்கள் மற்றும் பேரிடர் நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது.


இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. காஸாவின் ஒரு பகுதியை அது சுடுகாடு போல மாற்றி விட்டது. அடிப்படைக் கட்டமைப்புகள் சிதிலமாகி விட்டன. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். பெண்கள், குழந்தைகள், முதியோர், கர்ப்பிணிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.


காஸாவில் மிகவும் மோசமான நிலை நிலவுவதாகவும், உலக நாடுகள் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்றும் ஐ.நா பொதுச் செயலாளர் குட்டாரஸ் கோரிக்கை விடுத்துள்ளனர். பேரழிவில் காஸா பகுதி இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.




இந்த நிலையில் எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பாலஸ்தீனத்திற்கு உதவிகளைச் செய்ய ஆரம்பித்துள்ளன.  இஸ்ரேல் - ஹமாஸ் போரில், இஸ்ரேல் அரசுக்கு ஆதரவாக இருக்கும், இந்தியாவும் தற்போது தனது பங்கிற்கு பாலஸ்தீனத்திற்கு உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது.


இந்தியாவிலிருந்து, 6.5 டன் மருத்துவப் பொருட்கள், 32 டன் பேரிடர் நிவாரணப் பொருட்களை மத்திய அரசு பாலஸ்தீனத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இந்திய விமானப்படையின் சி17 போக்குவரத்து விமானத்தில் இந்த பொருட்கள் அனுப்பப்பட்டன. இந்தப் பொருட்களுடன் இந்திய விமானப்படை விமானம் எகிப்தின் எல் அரிஷ் விமான நிலையத்திற்குச் செல்லும். அங்கு இந்தப் பொருட்கள் சேர்ப்பிக்கப்படும். அங்கிருந்து இவை பாலஸ்தீனத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.


உயிர் காக்கும் மருந்துகள், சர்ஜிகல் பொருட்கள், கூடாரங்கள், ஸ்லீப்பிங் பேக்குகள், தார்பாலின், சானிட்டரி பொருட்கள், நீர் சுத்திகரிப்பு மாத்திரைகள் உள்ளிட்டவை இதில் அடங்கியுள்ளன. காஸாவில் உள்ள மருத்துவமனை மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான தாக்குதலில் 500க்கும் மேற்பட்ட அப்பாவிகள் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா சமீபத்தில் கண்டனம் தெரிவித்திருந்தது. அதன் பிறகு தற்போது உதவிப் பொருட்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.


மேலும் பாலஸ்தீன அதிபர் அப்பாஸுடனும், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசி, பாலஸ்தீனத்திற்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை இந்தியா தொடர்ந்து  செய்யும் என்றும் உறுதியளித்தார்.