Operation Ajay: இஸ்ரேலில் சிக்கிய இந்தியர்கள் 212 பேர்.. டெல்லி வந்தனர்!

Meenakshi
Oct 13, 2023,06:42 PM IST

டெல்லி: இஸ்ரேலில் நடந்து வரும் போரில் சிக்கிய இந்தியர்கள் 212  பேர் ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் மீட்கப்பட்டு விமானம் மூலம்  டெல்லி வந்தனர். இதில் 21 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நெடுங்காலமாக மோதல் இருந்து வருகிறது. பாலஸ்தீனியர்களிடம் இருந்த காசா பகுதியை, ஹமாஸ் அமைப்பு 2007ம் ஆண்டு கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்கு இடையே அவ்வப்போது மோதல் நடந்தபடியே இருக்கிறது.




இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு இடையிலான போர் முழு அளவை எட்டியுள்ளது. ஹமாஸ் நடத்திய எதிர்பாரா தாக்குதலால்  நிலைகுலைந்த இஸ்ரேல் தற்போது ஹமாஸை உண்டு இல்லை என்று செய்து வருகிறது. 7 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. 


இந்த நிலையில், இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு களம் இறங்கியுள்ளது. ஆபரேஷன் அஜய் எனும் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் சிக்கி தவித்த 212 இந்தியர்கள் தனி விமானம் மூலமாக டெல்லி வந்துள்ளனர். டெல்லி வந்த அவர்களை மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேரில் சென்று வரவேற்றார். மீதம் உள்ள இந்தியர்களையும் மீட்க மத்திய அரசு மீட்பு பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.


இன்று வந்த 212 பேரில் 21 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில். அவர்களில் 7 பேர் டெல்லியிலிருந்து கோவை சென்றனர்.  மற்றவர்கள் சென்னை வந்த சேர்ந்தனர். அவர்களை விமான நிலையத்தில் மாநில அமைச்சர் மா.சுப்ரமணியம் வரவேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாலஸ்தீனத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் சிக்கவில்லை என்று தெரிவித்தார்.