36 ஓவர்கள் வரை வெறும் 10 பவுண்டரிதான்.. ஆஸ்திரேலியா "மோசமான" பவுலிங் + பீல்டிங்!

Su.tha Arivalagan
Nov 19, 2023,09:52 PM IST

அகமதாபாத்:  ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சும், பீல்டிங்கும் மிகவும் டைட்டாக இருப்பதால் இந்திய வீரர்களால் பவுண்டரி அடிப்பதில் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர். 36 ஓவர்கள் வரை மொத்தமே 10 பவுண்டரிகளைத்தான் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கேப்டன் பேட் கம்மின்ஸை நிச்சயம் கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டித்தான் ஆக வேண்டும். அட்டகாசான பீல்டிங் வியூகம் அதை விட முக்கியமாக பவுலர்களை மிகச் சரியாக பயன்படுத்தி இந்தியாவின் வேகத்தை வெ்குவாக மட்டுப்படுத்தி விட்டார் பேட் கம்மின்ஸ்.


ஆஸ்திரேலியாவின் கிடுக்கிப்பிடி பவுலிங் மற்றும் பீல்டிங்கைத் தகர்த்து ரன் எடுத்தது என்று பார்த்தால் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் கே. எல். ராகுல் மட்டுமே. இதில் ரோஹித்தும், விராட்டும் பெரிதாக சிரமப்படவில்லை. ஆனால் ராகுல் மிக மிக சிரமப்பட்டுத்தான் 50 ரன்களைத் தொட முடிந்தது.




ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சும், பீல்டிங்கும் சிறப்பாக இருந்ததற்கு சரியான உதாரணம் அவர்கள் விட்டுக் கொடுத்த பவுண்டரிகளைப் பார்த்தாலே தெரியும். 36 ஓவர்கள் வரை மொத்தமே வெறும் 10 பவுண்டரிகளைத்தான் இந்தியாவால் விளாச முடிந்தது. அதில் ரோஹித், விராட் கோலி தலா 4 பவுண்டரிகள் அடித்திருந்தனர். ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் தலா 1 பவுண்டரி மட்டுமே விளாச முடிந்தது.  அதிலும் கிட்டத்தட்ட 60 பந்துகளைச் சந்தித்துத்தான் ராகுல் தனது பவுண்டரியை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆஸ்திரேலியா தனது விஸ்வரூபத்தைக் காட்டி ஆடி வருகிறது. இந்தியா அதை சமாளித்து போராடிக் கொண்டிருக்கிறது.. 300 ரன்களைத் தாண்டினால் இந்தியாவுக்கு நல்லது, பாதுகாப்பும் கூட.. பார்க்கலாம்.