"பாரத்".. அதெல்லாம் வெறும் வதந்தியே.. மறுக்கும் மத்திய அமைச்சர்

Su.tha Arivalagan
Sep 06, 2023,01:19 PM IST
டெல்லி:  இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றப் போவதாக வெளியாகும் தகவல்கள் எல்லாமே வதந்தி என்று மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

ஜி 20 மாநாட்டுக்கு வருகை தரும் தலைவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருந்து அளித்துக் கெளரவிக்கிறார். இதுதொடர்பாக அனுப்பப்பட்ட அழைப்பிதழில் 'President of Bharat' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கமாக மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தனியார் என யாராக இருந்தாலும் இந்தியா என்றுதான் குறிப்பிடுவது வழக்கம். அப்படித்தான் நமது நாடு உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் அழைக்கப்படுகிறது.



எனவே குடியரசுத் தலைவர் மாளிகை அழைப்பிதழ் பல்வேறு சலசலப்புகளை கிளப்பியது. அதேபோல பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான அழைப்பிதழிலும் கூட பாரத் பிரதமர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து நாட்டின் பெயரை பாரத் என்று மாற்ற பாஜக அரசு திட்டமிட்டிருப்பதாகவும், சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இதுதொடர்பான தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பைக் கூட்டின.

இந்த நிலையில் இந்தப் பேச்சுக்களுக்கு மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதுதொடர்பான கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில்,  நாட்டின் பெயரை மாற்றும் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கூட்டப்படவில்லை.  இவையெல்லாம் வெறும் வதந்தியே.  ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். பாரத் என்ற பெயரை யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அது அவர்களது மன நிலையை வெளிக்காட்டுவதாக உள்ளது என்றே அர்த்தம்.

பாரதத்தின் ஜனாதிபதிதான் திரவுபதி முர்மு. அதனால்தான் பாரதத்தின் ஜனாதிபதி என்று அழைப்பிதழில் வாசகம் இடம் பெற்றது. அதனால் என்ன... நான் பாரத சர்க்காரின் அமைச்சர். அதில் என்ன புதிதாக வந்து விட்டது. ஜி20 2023 பிராண்ட், லோகோவிலும் கூட பாரத், இந்தியா என்றுதான் எழுதப்பட்டுள்ளது.  இதற்கு ஏன் திடீரென ஆட்சேபனை வருகிறது.  பாரத் என்று சொன்னால் சிலருக்கு ஆட்சேபனை வருவது ஏன்.. இது அவர்களது மன நிலையைக் காட்டுகிறது. அவர்களது இதயங்களில் பாரத்துக்கு எதிரான மன ஓட்டம் இருப்பதைக் காட்டுகிறது. 

வெளிநாட்டுக்குப் போனால் பாரதத்தை விமர்சிக்கிறார்கள்.. இந்தியாவிலும் அவர்கள் பாரத் என்று சொல்வதை எதிர்க்கிறார்கள்.  யாரும் இந்தியா என்ற பெயரை கைவிடவில்லை. அது அப்படியேதான் இருக்கிறது என்றார் அனுராக் தாக்கூர்.