Operation Ajay: இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை தொடக்கம்

Su.tha Arivalagan
Oct 12, 2023,10:00 AM IST

டெல்லி: இஸ்ரேல் -ஹமாஸ் போருக்கு மத்தியில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு ஆபரேஷன் அஜய் என்ற நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.


இஸ்ரேலுக்கும், ஹமாஸ் அமைப்புக்கும் இடையே போர் தீவிரமாகியுளளது. இஸ்ரேல் முழு அளவில் போரில் இறங்கியுள்ளது. காஸா முனையை சின்னாபின்னமாக்கி வருகிறது. உயிரிழப்பைப் பற்றி அது கவலைப்படவில்லை. மாறாக, காஸாவை நிர்மூலமாக்கி அந்தப் பகுதியை முழுமையாக கைப்பற்றுவதில் தீவிரமாக உள்ளது. ஹமாஸை பூமியிலேயே இல்லாத அளவுக்கு அழித்தொழிப்போம் என்றும் இஸ்ரேல் கூறியுள்ளது.




இஸ்ரேலின் இந்த போர் வேகத்தில் சிக்கி ஏராளமான அப்பாவி மக்களும் பலியாகி வருகின்றனர். ஹமாஸுக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைக்காததால் அந்த அமைப்பினர் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர்.


இந்த நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையில் இந்தியா களம் இறங்கியுள்ளது. ஆபரேஷன் அஜய் என்ற பெயரில் இந்த மீட்புப்  பணியை இந்தியா தொடங்கியுள்ளது. இஸ்ரேலில் கிட்டத்தட்ட 18,000 இந்தியர்கள் உள்ளனர். இவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக சிறப்பு விமானங்களை இந்தியா ஆயத்த நிலையில் வைத்துள்ளது. பிற ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.


இந்தியாவுக்குத் திரும்ப விண்ணப்பித்திருப்போரின் முதல் பிரிவினர் இன்று சிறப்பு விமானத்தில் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகமும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய தூதரகத்திற்கு விண்ணப்பித்திருப்போருக்கு இமெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.