நிலவில் இந்தியா.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி.. வாழ்த்து

Su.tha Arivalagan
Aug 23, 2023,07:21 PM IST
டெல்லி/சென்னை: நிலவில் இந்தியா காலடி எடுத்து வைத்திருப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்தும், மகிழ்ச்சியும் வெளியிட்டுள்ளனர்.

இஸ்ரோவின் சந்திரயான் 3 திட்டம் மாபரும் வெற்றி பெற்றுள்ளது. எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் சந்திரயான 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பத்திரமாக நிலவில் தரையிறங்கி விட்டது. இனி அதில் இடம் பெற்றுள்ள பிரக்யான் ரோவர் நிலவில் ஆய்வுகளை நடத்தவுள்ளது.

சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றிருப்பதை நாடே கொண்டாடி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றுள்ள நிலையில் அங்கிருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் இதைக் கண்டு மகிழ்ந்தார். அங்கிருந்தபடியே இஸ்ரோ விஞ்ஞானிகளையும், சந்திரயான் 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் உள்ளிட்ட குழுவினரையும் அவர் பாராட்டி வாழ்த்தினார்.



அதேபோல முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள செய்தியில்,  இந்தியா நிலவில் கால் பதித்து விட்டது. இஸ்ரோவுக்கு வாழ்த்துகள். சந்திரயான் 3 விண்கலத்தை மிக பத்திரமாக தரையிறக்கியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. நிலவில் கால் பதித்த நான்காவது நாடு என்பது மாபெரும் சாதனையாகும். இந்த மிகப் பெரிய சாதனையை மேற்கொண்ட அணியினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தியாவின் விண்வெளி தேடலில்இது மாபெரும் முன்னேற்றமாகும் என்று கூறியுள்ளார் ஸ்டாலின்.

இதேபோல காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட பிற கட்சித் தலைவர்களும் வாழ்த்தும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர். டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பட்டாசு வெடித்து  காங்கிரஸ் கட்சியினர் இதைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.