"இந்தியா"வைக் காணோம்.. பிரதமர் நரேந்திர மோடி முன்பு பளிச்சிட்ட "பாரத்"

Meenakshi
Sep 09, 2023,12:53 PM IST
டெல்லி: ஜி-20 மாநாட்டு தொடங்கியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இருக்கைக்கு முன்பு இந்தியா என்ற பெயருக்குப் பதிலாக பாரத் என்ற பெயர் இடம் பெற்ற பெயர்ப் பலகை வைக்கப்பட்டிருந்தது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

முதன்முறையாக ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இது நம் நாட்டிற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கவுரவமாகும்.  உலகின் மிகவும் சக்திவாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி-20 அமைப்பின் தலைமை பதவியை இந்தியா வகித்து வருகிறது. 



ஜி 20 உச்சி மாநாடு இன்று மற்றும் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்க அர்ஜென்டினா, பிரேசில், ஆஸ்திரேலியா, கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட 29 உலக நாடுகளின் தலைவர்கள் இந்தியா வருகை தந்துள்ளனர்.

இன்று காலை ஜி-20 மாநாட்டில் கலந்துகொள்ள உலக தலைவர்கள் பாரத் மண்டபம் வந்தனர். அவர்கள் அனைவரையும் பிரதமர் மோடி வரவேற்றார். அனைவரின் வருகையை தொடர்ந்து மாநாடு தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது பிரதமர் முன்பு இருந்த பெயர்ப் பலகை அனைவரையும் கவர்ந்தது. ஒவ்வொரு தலைவருக்கு முன்பும் அவர்கள் சார்ந்த நாட்டின் பெயர் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. 

பிரதமர் மோடி முன்பு வைக்கப்பட்டிருந்த பெயர்ப் பலகையில் பாரத் என்ற பெயர் இடம் பெற்றிருந்தது. வழக்கமாக இந்தியா என்றுதான் பெயர் இடம் பெற்றிருக்கும். ஆனால் முதல் முறையாக பாரத் என்ற பெயர் இடம் பெற்றிருந்தது.  சமீப காலமாக மத்திய அரசு நாட்டின் பெயரை பாரத் என்றே பயன்படுத்த ஆரம்பித்துள்ளது என்பது நினைவிருக்கலாம்.