மோடி தலைமையிலான இந்தியா.. பாகிஸ்தானை தாக்க தயங்காது.. அமெரிக்கா எச்சரிக்கை

Su.tha Arivalagan
Mar 10, 2023,10:04 AM IST

டெல்லி: பாகிஸ்தான் வாலாட்டிக் கொண்டே இருந்தால், முன்பு போல இந்தியா பொறுமை காக்கும் என்று இனியும் எதிர்பார்க்க முடியாது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா, நிச்சயம் பாகிஸ்தானுக்கு ராணுவ ரீதியிலான பதிலடி கொடுக்கத் தயங்காது என்று அமெரிக்க உளவுப்பிரிவு எச்சரித்துள்ளது.


அமெரிக்க உளவுத்துறை, ஆண்டுதோறும் பல்வேறு நாட்டு உறவுகள், ராணுவ ரீதியிலான மிரட்டல்கள், பாதுகாப்பு தொடர்பான அறிக்கையை அந்த நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கு அளிப்பது வழக்கம். அந்த வகையில் இந்தியா பாகிஸ்தான் சீனா இடையிலான ராணுவ ரீதியிலான மோதல்கள், உறவுகள் குறித்த விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில்தான் மேற்கண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.




அமெரிக்க உளவுத்துறை கொடுத்துள்ள விளக்கத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:


இந்தியா பாகிஸ்தான் மற்றும் இந்தியா சீனா இடையிலான உராய்வுகள் அதிகரித்துக் கொண்டோ போகின்றன. இவை போராக மாறக் கூடிய சாத்தியக் கூறுகளும் உள்ளன.


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா, பாகிஸ்தானை தொடர்ந்து பொறுத்துக் கொண்டு போக வாய்ப்பில்லை. பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஏதாவது சீண்டல்கள் வருவது உறுதிபடத் தெரிந்தால் நிச்சயம் இந்தியா ராணுவ ரீதியிலான பதிலடியைக் கொடுக்கத் தயங்காது.


இந்தியா சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இருப்பினும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் தொடர்ந்து  உரசல் இருந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக 2020ம் ஆண்டு நடந்த கடும் மோதலுக்குப் பின்னர் எல்லைப் பகுதி எப்போதும் பதட்டத்துடனேயே இருந்து வருகிறது.


எல்லைப் பிரச்சினையில் நிரந்தர தீர்வு ஏற்படாத வரையில், சீனாவுடனான உறவு இயல்பாக இருக்க முடியாது என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. 


இந்தியா பாகிஸ்தான் உறவும் தொடர்ந்து பதட்டத்திலேயே இருந்து வருகிறது. இந்தியப் படையினர் முன்பை விட இப்போது விழிப்புடன் உள்ளனர். பாகிஸ்தான் தரப்பிலிருந்து ஏதாவது உறுதியான அத்துமீறல் இருந்தால் அந்த நாட்டின் மீது இந்தியா பதிலடி கொடுக்கும்.  இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை ஊடுறுவச் செய்து, அவர்களுக்கு பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரவாக இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டுகிறது. தீவிரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் இருக்க முடியாது என்றும் இந்தியா உறுதிபடக் கூறியுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.