நாடும் நமதே.. நாற்பதும் நமதே..  மு.க.ஸ்டாலின் அறைகூவல்!

Su.tha Arivalagan
Sep 11, 2023,01:04 PM IST
நெய்வேலி: "நாடும் நமதே நாற்பதும் நமதே என்ற முழக்கத்திற்கேற்ப நாம் அனைவரும் சேர்ந்து உறுதிமொழி எடுக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் வெல்ல வேண்டும்" என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நெய்வேலியில் நேற்று எம்எல்ஏ சபா.இராஜேந்திரன் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தின் நடத்தி வைத்தார். திருமண விழாவில் அமைச்சர்கள் பொன்முடி ,எம் .ஆர். கே பன்னீர்செல்வம், செஞ்சி மஸ்தான் , காங்கிரஸ் தலைவர் கே .எஸ் அழகிரி ,தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் ஆகியோர் பங்கேற்றனர்.



முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.  அப்போது அவர் பேசுகையில், நெய்வேலியில் மூன்று ஆண்டுகளாக எம்எல்ஏ சபா ராஜேந்திரன் சிறப்பாக பணியாற்றி வருகிறார். தனது தொகுதிக்கு எது தேவை என்பதை கேட்டுப் பெறுவதில் கண்ணும் கருத்துமாக சபா. ராஜேந்திரன் இருப்பார். 

திருமண விழாவில் மணமக்களுக்கு நான் இரண்டு கோரிக்கைகளை வைக்கிறேன்.ஒன்று மணமக்கள், தங்களது குழந்தைக்கு கண்டிப்பாக தமிழில் பெயர் வைக்க வேண்டும். மற்றொன்று மணமக்கள் வீட்டுக்கு விளக்காகவும் , நாட்டுக்கு நல்ல தொண்டராகவும் விளங்க வேண்டும். நம்முடைய வீடு மட்டுமல்ல நாடும் நன்றாக இருக்க வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் மட்டுமே இந்தியாவை காப்பாற்ற முடியும். ஆகவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு, புதுவையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே மத்திய அமைச்சரவையில் திமுக முக்கிய பங்காற்ற முடியும். 

வெற்றி பெற வேண்டும் என்று நாம் அனைவரும் சேர்ந்து உறுதிமொழி எடுக்க வேண்டும்.  நாடும் நமதே நாற்பதும் நமதே என்று முதல்வர் கூறினார்.