லோக்சபா தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக ஒன்று கூடும் இந்தியா கூட்டணி தலைவர்கள்

Aadmika
Aug 07, 2024,10:23 AM IST

டில்லி : லோக்சபா தேர்தல் நிறைவடைந்த பிறகு இந்தியா கூட்டணி தலைவர்கள் முதல் முறையாக சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எதற்காக இந்த திடீர் சந்திப்பு என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.


2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன், பாஜக.,வை மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்க விடக் கூடாது என்பதற்காக 20 எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கின. லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களையும், இந்தியா கூட்டணி 243 இடங்களையும் பெற்றன. ஜூன் 04ம் தேதி லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு, மூன்றாவது முறையாக மத்தியில் பாஜக., ஆட்சி அமைத்தது.




இந்நிலையில் லோக்சபா தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சி தலைவர்கள் இந்த வாரம் டில்லியில் முதல் முறையாக கூடி ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்க முன் ஜூன் 01ம் தேதி இவர்கள் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் தேதி இதுவரை இறுதி செய்யப்படவில்லையாம். 


ஜூன் 01ம் தேதி நடந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி கலந்து கொள்ளவில்லை. காரணம் அதே நாளில் மேற்குவங்கத்தில் பல தொகுதிகளில் தேர்தல் நடந்து கொண்டிருந்தது. அதனால் இந்த முறை நடைபெறும் கூட்டத்தில் மமதா கண்டிப்பாக பங்கேற்பார் என சொல்லப்படுகிறது. தற்போது பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடர் நடந்த வருவதால் ஏற்கனவே இந்தியா கூட்டணியை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள் டில்லியில் தான் இருந்து வருகிறார்கள். சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று டில்லி வந்தார். இன்னும் சில தலைவர்களும் டில்லி வர உள்ளதாக சொல்லப்படுகிறது.


ஏற்கனவே பார்லிமென்டில், ஆயுள் காப்பீடுகள் மீதான 18 சதவீத ஜிஎஸ்டி.,யை திரும்ப பெற வலியுறுத்தி பார்லிமென்ட் நுழைவுவாயில் அருகில் இந்தியா கூட்டணி எம்பி.,க்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த கூட்டத் தொடர் துவங்கியது முதலே எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடப்பு பார்லிமென்ட் கூட்டம் நடக்க உள்ளது.  இதனால் இந்தியா கூட்டணியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க தான் எதிர்க்கட்சிகள் ஒன்று கூடலாம் என சொல்லப்படுகிறது.