சபாஷ் ரெக்கவரி.. 2014 தேர்தலுக்குப் பிறகு பீனிக்ஸ் பறவையாய் மீண்டு வந்த காங்கிரஸ் கூட்டணி!

Su.tha Arivalagan
Jun 04, 2024,11:14 AM IST

டெல்லி : 2014 லோக்சபா தேர்தலுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸ் கூட்டணி ஃபீனிக்ஸ் பறவை போல் எழுச்சி பெற்று வந்துள்ளது என்றே சொல்லலாம். 2014 தேர்தலை விட 2019 தேர்தலில் சற்று முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் 2024 தேர்தலில் தேசிய பாரம்பரிய கட்சியான காங்கிரஸ் தன்னுடைய பலத்தை மீட்டெடுத்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது.


முழுமையான தன்னம்பிக்கை, விடா முயற்சி, கடுமையாக போராடியது, மக்களின் நம்பிக்கையப் பெற்றது உள்ளிட்டவை காரணமாகவே காங்கிரஸுக்கு இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. குறிப்பாக இந்தியா கூட்டணியை அமைத்தது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.




கடந்த 2014 லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெறும் 44 இடங்களில் மட்டுமே வென்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 59 இடங்கள் கிடைத்தன. அதே சமயம், 2019 தேர்தலில் காங்கிரஸ் 52 தொகுதிகளிலும்,  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி 91 இடங்களிலும் வென்றன. ஆனால் 2024 தேர்தலில் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி புதிய வரலாறு படைத்துள்ளது. 


காங்கிரஸ் கட்சி மட்டும் 100 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. இந்தியா கூட்டணிக்கு 200க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. பாஜகவுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இந்த முறை கடும் நெருக்கடியை இந்தியா கூட்டணி ஏற்படுத்தியுள்ளது. 


இந்தியா கூட்டணி வெற்றிக்கு முக்கியக் காரணங்கள்  சில...


பாரத் ஜோடா யாத்திரை :


மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடு முழுவதும் நாடு முழுவதும் பாரத் ஜோடா யாத்திரை என்ற நடைபயணத்தை மேற்கொண்டார். இதற்கு பாஜக.,விற்கு எதிரான கட்சிகள் மட்டுமின்றி மக்களிடமும் ஆதரவு இருந்தது. மக்கள் மத்தியில் காங்கிரசிற்கு மீண்டும் செல்வாக்கு உயர இது முக்கிய காரணமாக அமைந்தது. இதில் 2வது கட்ட யாத்திரையை விட முதல் கட்ட யாத்திரைதான் காங்கிரஸ் கட்சிக்கு செல்வாக்கை கூட்டியது.


இந்தியா கூட்டணி :

 

தேசிய அளவில் பாஜக.,விற்கு எதிரான எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா கூட்டணியை உருவாக்கியது காங்கிரஸ் கூட்டணிக்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. இதில் சிலர் விலகி பாஜக பக்கம் சாய்ந்தாலும், காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற பாஜக.,வின் கொள்கைக்கு எதிராக, பாஜக இல்லாத இந்தியா என்ற கொள்கையை குறிக்கும் வகையில் இந்தியா என கூட்டணிக்கு பெயர் வைத்தது மக்கள் மத்தியில் பெரும் எளிதில் சென்றடைந்துள்ளது.


தேர்தல் பத்திரம் ஊழல் :


தேர்தல் பத்திரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்த்த சில விஷயங்கள் பாஜக.,விற்கே பாதிப்பாக அமைந்து விட்டது. 


வேலையின்மை :


மக்களை கவருவதற்காக பாஜக எத்தனையே திட்டங்களை கொண்டு வந்தாலும், வட மாநிலங்களை பொறுத்தவரை வேலைவாய்ப்பின்மை மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. வேலை வாய்ப்பிற்காக வட மாநிலத்தவர்கள் தென் மாநிலங்களுக்கு இடம்பெயரும் நிலை தான் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை வட மாநில மக்களிடம் பாஜக மீது அதிருப்தியையே ஏற்படுத்தி உள்ளது.


அசத்திய ராகுல் காந்தி:


தன்னை பாஜகவினர் தொடர்ந்து  பப்பு என்று கேலி செய்து வந்தபோதிலும் கூட, தரக்குறைவான விமர்சனங்களை சந்தித்து வந்த போதிலும் கூட அதைப் பொருட்படுத்தாமல் மக்களோடு மக்களாக ராகுல் காந்தி இறங்கிச் சென்றது, அவர்களுடன் கலந்தே இருந்தது உள்ளிட்டவை மூலம் காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கிடைத்துள்ளது. அத்தோடு ராகுல் காந்தியும், தான் மக்களின் தலைவர் என்பதை நிரூபித்து விட்டார் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.