சின்னாபின்னமான நியூசிலாந்து.. 7 விக்கெட் அள்ளிய ஷமி.. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா!

Su.tha Arivalagan
Nov 15, 2023,10:36 PM IST

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் இந்தியா அதிரடியாக ஆடி 70 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியைப் பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்தது.


398 ரன்கள் என்ற மிகப் பெரிய இலக்கைத் துரத்திய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் இந்தியாவுக்கு கலக்கத்தைக்   கொடுத்தாலும் கூட முகம்மது ஷமியின் அதிரடியான பந்து வீச்சில் பொறி கலங்கிப் போனது. முக்கிய விக்கெட்களை சரியான நேரத்தில் சாய்த்து நியூசிலாந்தின் வேகத்தை முறித்து விட்டார் ஷமி.


அபாரமாக பந்து வீசிய ஷமி 7 விக்கெட்களைச் சாய்த்தார். பும்ரா, குல்தீப் யாதவ் , முகம்மது சிராஜ் ஆகியோருக்கு தலா  ஒரு விக்கெட் கிடைத்தது. இந்த வெற்றியின் மூலமாக நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் முதல் அணியாக இந்தியா இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.


முன்னதாக, இந்தியத் தரப்பில் விராட் கோலியும், ஸ்ரேயாஸ் ஐய்யரும் மிரட்டலாக ஆடி ஆளுக்கு ஒரு சதம் எடுத்தனர். சுப்மன் கில் ரிடையர்ட் ஹர்ட் ஆகி பாதியில் வெளியேறியதால் சத வாய்ப்பை நழுவ விட்டார். இருப்பினும் அவர் 80 ரன்கள் குவித்து அசத்தினார். கேப்டன் ரோஹித் சர்மா 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.


இன்றைய போட்டியின் மெகா சிறப்புகள்:




- விராட் கோலி ஒரு நாள் போட்டிகளில் தனது 50வது சதத்தை விளாசி சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.


- கேப்டன் ரோஹித் சர்மா உலகக் கோப்பைப் போட்டிகளில் 50வது சிக்ஸரை விளாசி புதிய சாதனை படைத்தார். கிறிஸ் கெய்ல் சாதனையை அவர் முறியடித்தார்.


- உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியில் முதல் முறையாக சதம் அடித்து வரலாற்றில் தன்னையும் பதிவு செய்து கொண்டார் ஸ்ரேயாஸ் ஐய்யர்.


- ஸ்ரேயாஸ் ஐய்யருக்கு இது 18வது ஒரு நாள் சதமாகும்.


- 2வது விக்கெட்டுக்கு கோலியும், ஐய்யரும் இணைந்து 150 ரன்களைக் குவித்தனர்.


- ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக 2000 ரன்களைக் கடந்தார் ரோஹித் சர்மா.


- சுப்மன் கில் தனது 13வது ஒரு நாள் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.


ஹவுஸ்ஃபுல் ஆன மும்பை வாங்கடே மைதானம்




முன்னதாக இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை முதலில் தேர்வு செய்து ஆடத் தொடங்கியது. அரங்கு நிறைந்த காட்சி என்று கூறும் அளவுக்கு மும்பை வாங்கடே மைதானம் முழு அளவில் நிரம்பியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட ஏகப்பட்ட பிரபலங்கள் போட்டியைக் காண குவிந்துள்ளனர்.


இன்றைய போட்டியைக் காண வந்திருந்த சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி தனது சத சாதனையை முறியடித்தபோது எழுந்து நின்று கை கட்டி பாராட்டினார்.  விராட் கோலியின் மனைவி அனுஷ்கா, தனது கணவரின் சாதனையை மிக மிக மகிழ்ச்சியுடன் கை தட்டி கொண்டாடினார். அவருக்கு விராட் கோலி பறக்கும் முத்தங்களை அனுப்ப, பதிலுக்கு அவர் அனுப்ப மைதானமே குதூகலித்தது.