மன்னார் வளைகுடா பகுதியில்..புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடிப்பதற்காக தெற்கு பகுதி இந்திய பெருங்கடல் செல்வதற்கு வழிவகை செய்யும் பொருட்டு தங்கச்சிமடம் பகுதியில் 150 கோடி செலவில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. அப்போது முதல்வர் மு.க ஸ்டாலின் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது நிறைவேறாதது மிகுந்த வேதனை அளிக்கிறது. இருப்பினும் கழக அரசு மீனவர்களின் மீன்பிடித் தொழிலை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம் என அறிவித்துள்ளார். இது குறித்து மீனவர்களுக்காக வெளியிடப்பட்ட திட்டங்கள் பின்வருமாறு,
இலங்கை சிறையில் வாழும் மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும், இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ள படகுகளை திருப்பித் தர வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தோம். இலங்கை சென்றிருந்த மாண்புமிகு பிரதமர் அவர்கள் இதுகுறித்து இலங்கை அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டு இருந்தோம். அந்த தீர்மானத்தை மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்களுக்கு உடனடியாக அனுப்பி வைத்திருந்தோம். இந்த நிலையில் மாண்புமிகு இந்திய பிரதமர் அவர்கள் இலங்கை சென்றிருந்தார். அப்போது மீனவர்கள் விடுதலை மற்றும் கச்சத்தீவு குறித்து பெரிய அளவிலான முன்னெடுப்பு எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. மேலும் சிறையில் வாழும் 97 மீனவர்களும், சிறைபிடிக்கப்பட்டு உள்ள படகுகளும் மீட்கப்பட்டு தாயகம் திரும்புவார்கள் என்று எதிர்பார்த்து நிறைவேறாதது நமக்கெல்லாம் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கின்றன. தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களைச் சார்ந்த மீனவர்கள் அடிக்கடி அதிக எண்ணிக்கையில் கைது செய்யப்படுவது கடந்த சில மாதங்களாக நம் அனைவரையும் கவலைக்குள்ளாக்கி வரக்கூடிய செய்தியாகும். ஒன்றிய அரசும் இந்திய பிரதமரும் நமது கோரிக்கைகளை புறக்கணிக்கிறார்கள் என்றே கருத வேண்டி உள்ளது. ஒன்றிய அரசு எப்படி நடந்து கொண்டாலும் நமது மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நாம் தவறமாட்டோம்.
கழக அரசு அவர்களுக்கு, மீனவர்கள் பொருளாதாரத்தை மேம்படுத்துதல், மீன்பிடி தொழிலுக்கு தேவையான உபகரண வசதிகளை ஏற்படுத்தித் தருதல் போன்ற பல்வேறு திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தி இருக்கிறோம் . மாண்புமிகு பேரவை தலைவர் அவர்களே தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் குறிப்பாக, மன்னார் வளைகுடா, ராமநாதபுரம், நாகப்பட்டினம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த மீனவர்கள் இலங்கை கடற்படை கைது நடவடிக்கையால் நாளுக்கு நாள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடிப்புக்கு செல்லும்போது அவர்களுக்கு ஏற்படக்கூடிய இன்னல்களை களைவதற்கு ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தால் கூட இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் படங்கள் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த படகுகள் நாட்டுடைமை ஆக்கப்படுவதுமான செயல்கள், நமது தொடர் வலியுறுத்தல்களையும் கோரிக்கையும் மீறி நடைபெற்று வருகிறது. எனவே இப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு அரசு சில முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. அவற்றை இப்பேரவை வாயிலாக நாட்டு மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். மன்னார் வளைகுடா பகுதி மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடிப்பதற்காக தெற்கு பகுதி இந்திய பெருங்கடல் செல்வதற்கு வழிவகை செய்யும் பொருட்டு தங்கச்சிமடம் பகுதியில் 150 கோடி செலவில் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும். 60 கோடி மதிப்பீட்டில் பாம்பன் தொகுதியில் மற்றும் 180 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குந்துக்கல் பகுதிகளிலும் மீன்பிடித் துறைமுகப் பணிகள் மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே நான் அறிவித்திருக்கிறேன். இவற்றைத் தவிர மன்னார் வளைகுடா பகுதியில் மீனவர்களின் வாழ்வாரத்தை உறுதிபடுத்த சில புதிய வாழ்வாதார திட்டங்களை செயல்படுத்திட பின்வரும் சிறப்பு திட்டங்களை அறிவிக்கிறேன். கடற்பாசி வளர்ப்பு, பதப்படுத்துதல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள், விற்பனை தொடர்புடைய தொழில்கள், போன்றவற்றிற்கு தொழில்நுட்ப பயிற்சியுடன் தேவையான உபகரணங்கள் அளித்து தொழிலில் ஈடுபட சுமார் 7000 பயனாளிகளுக்கு 52 கோடியே 33 லட்ச ரூபாய் செலவில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
கூண்டு முறையில் மீன் மற்றும் சேற்று நண்டு வளர்ப்பு பதப்படுத்துதல் விற்பனை தொடர்புடைய தொழிலை மீனவ சமுதாய மக்கள் மேற்கொள்ள 25 கோடியே 82 லட்ச செலவில் உபகரணங்கள் வழங்கி தொடர் பணிகளும் மேற்கொள்ளப்படும்.
மீன்பிடித்தல், மீன் பதப்படுத்துதல், மீன் உலர்த்தும் தொழில் நுட்பங்கள், தொழில்நுட்ப உபகரணங்கள் அளித்தல் மற்றும் பயிற்சிகளை வழங்கி ஊக்குவிக்க திட்டம் சுமார் 2000 மீனவ குடும்ப பயனாளிகளுக்கு 9 கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
சுமார் 15 ஆயிரத்து 300 மீனவர்களுக்கு மீன் மற்றும் மீன் சார்ந்த மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்வதற்கான தொழில் நுட்ப பயிற்சி அளிக்க 20 கோடியே 52 லட்ச ரூபாய் செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்.
மீன் வளம் சார்ந்த வாழ்வாதாரமான வலை பின்னுதல், வலை பழுதுபார்த்தல், படகு கட்டுமான தொழில், படகு பழுதுபார்த்தல், கருவாடு தயாரித்தல் வண்ண மீன் தொட்டி தயாரித்தல், படகு ஓட்டுனர் பயிற்சி, கடல் சிப்பி அலங்கார பொருட்கள் தயாரித்தல் ஆகிய தொழில்கள் செய்ய 54 கோடியே 48 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 20,100 மீனவர்கள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
மீன் தொழில் சாராத பிற தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி தர குறிப்பாக காளான் வளர்ப்பு, சுற்றுலா படகு இயக்குதல், கைவினைப் பொருட்கள் தயாரித்தல், வீட்டு முறை மசாலா பொடிகள் தயாரித்தல், அழகு கலை பயிற்சி, சிறுதானியங்கள் செய்ய போன்ற பல்வேறு தொழில்களை செய்ய சுமார் 14 ஆயிரத்து 700 பயனாளிகளுக்கு 53 கோடியே 62 லட்சம் செலவில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
தமிழ்நாடு அரசின் மீன்வளத்துறை, மீனவர் கூட்டுறவு சங்கங்கள், மகளிர் குழுக்கள், தொழிலாளர் நலத்துறை, தமிழ்நாடு மேம்பாட்டு கழகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், போன்ற பல்வேறு அமைப்புகளுடன் அரசு துறைகளும் இணைந்து இத்திட்டங்கள் செயல்படுத்தும்.
இத்திட்டங்களை எல்லாம் ஒருங்கிணைக்க திட்ட கண்காணிப்பு பிரிவு அமைக்கப்பட்டு அதன் மூலம் திட்ட செயல்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்படும்.
நமது மீனவர்கள் வாழ்வாதாரத்தை காத்து மேம்படுத்தும் பொருட்டு, இந்திய பெருங்கடலின் ஆழ்கடல் பகுதிகளில் மீன்பிடிப்பு செய்வதற்கு ஏதுவாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மீன் பிடி துறைமுகங்கள் 360 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 216 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவிடப்படும். மொத்தம் 576 கோடியே 73 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும் இந்த திட்டங்களால் மன்னார் வளைகுடா பகுதியை சேர்ந்த மாவட்டம் மீனவர்கள் பெரிதும் பயன்படுவார்கள். அவர்கள் வாழ்வாதாரமும் மேம்படும். அது மட்டுமல்ல நமது மீனவ சமுதாய சொந்தங்கள் கூடுதல் வாய்ப்புகள் பெற்று பயனடைவர் என அறிவித்துள்ளார்.