கடைசில எல்லோரும் அனுமார் பக்கம் திரும்பிட்டாங்களே.. கர்நாடகத்தில் கலகல!

Su.tha Arivalagan
May 05, 2023,11:56 AM IST

பெங்களூரு: பொம்மை அரசின் 40% ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வன்முறை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் அலையடித்து வந்த நிலையில் தற்போது கர்நாடக சட்டசபைத் தேர்தல் களத்திற்குள் அனுமார் புகுந்து அத்தனை பிரச்சினைகளையும் ஓரம் கட்டி விட்டார்.

கர்நாடக பாஜக அரசுக்கு எதிராக ஆவேசமாக பேசி வந்த காங்கிரஸே தற்போது அனுமார் குறித்துப் பேச ஆரம்பித்திருப்பது அந்தக் கட்சிக்குப் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மறுபக்கம், பாஜக தார்மீக ரீதியாக ஒரு வகையான வெற்றியைப் பெற்றுள்ளதாகவும் பேசப்படுகிறது. இந்துக்களின் வாக்குகள் சிதறாமல் பாஜக பக்கம் போவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகரித்துள்ளன. 

இப்படி இந்துக்களின் வாக்குகளைக் குறி வைத்துத்தான் பாஜகவும் காங்கிரஸின் அதிரடியைப் பொருட்படுத்தாமல் பொறுமை காத்ததாக அரசியல்நோக்கர்கள் கருதுகிறார்கள். காங்கிரஸ் தேவையில்லாமல் சொதப்பி விட்டதாகவும் அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த திடீர் மாற்றம் கரநாடக தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் ஊழலை முன்வைத்தும், பாஜக அரசின் நிர்வாக செயல் திறமையின்மையை வெளிச்சம் போட்டுக் காட்டியும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவை சுட்டிக் காட்டியும், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லாத நிலை நிலவுவதை வைத்தும் காங்கிரஸ் படு வேகமாக பிரச்சாரம் செய்து வந்தது. மக்கள் மத்தியிலும்  பாஜக அரசுக்கு எதிரான ஒரு விதமான அலை நிலவி வந்ததால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவும் காணப்படுகிறது. பல்வேறு கருத்துக் கணிப்புகள் இதை்ததான் சொல்லின. காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெல்லும் என்று கூறப்பட்டு வருகிறது.

ஆனால் மறுபக்கம் பாஜக பெரிய அளவில் அலட்டிக் கொள்ளவில்லை. தனது பிரச்சாரத்தை தீவிரமாக்கி வந்தது. பிரதமர் நரேந்திர மோடி வந்தார், அமித் ஷா வந்தார்.. தற்போது  பாஜகவின் பிரச்சார உத்திகள் வேகம் பிடித்துள்ளன. பாஜகவின் தேர்தல் அறிக்கை அங்கு பாராட்டைப் பெற்றுள்ளது. இத்தனைக்கும் ஏகப்பட்ட இலவச அறிவிப்புகள்தான் இடம் பெற்றுள்ளன. ஆனால் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வைத்து தற்போது பாஜக அதிரடி காட்ட ஆரம்பித்துள்ளது.

பஜ்ரங்தளத்தை தடை செய்வோம் என்று காங்கிரஸ் கூறியதை வைத்து அப்படியே பிளேட்டை மாற்றிப் போட்டு விட்டது பாஜக. பஜ்ரங்தளத்தை தடை செய்யும் விவகாரத்தை முன்வைத்து தற்போது இந்துக்களின் வாக்குகளைக் குறி வைத்து என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து வருகிறது பாஜக. இதனால் இந்துக்களின் வாக்குகள் சிதறுமோ என்றஅச்சத்தில் காங்கிரஸ் உள்ளது.

பாஜக ஒருபக்கம் அனுமன்சாலிஸாவை பாடும் பிரச்சாரத்தை கையில் எடுக்க மாநிலமே இப்போது அனுமார் பக்கம் போய் விட்டது. இதற்குப் பதில் அளிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் அனுமார் கோவில் கட்டுவோம் என்று காங்கிரஸும் கிளம்பி விட்டது.. இப்படியாக தேர்தல் களத்தில் இப்போது அனுமார் புகுந்து விட்டார். காங்கிரஸின் இந்த செயல்பாடு, பாஜகவின் அழுத்தங்களுக்கும், தந்திரங்களுக்கும் பணிந்து விட்டதாகவே கருதப்படுகிறது. காங்கிரஸின் அதி வேகத்தை மிகவும் சாதுரியமாக அனுமாரை வைத்து பாஜக சாய்த்து விட்டதாகவும் கருதப்படுகிறது. மக்களை முக்கியப் பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பி விட்டதாகவும் பாஜக குறித்து கருத்துக்கள் கிளம்பியுள்ளன. 

பார்க்கலாம்.. இது தேர்தல் முடிவில் எதிரொலிக்குமா என்பதை.