Immersion of Vinayagar Idols: சென்னையில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பு.. போலீஸ் குவிப்பு

Su.tha Arivalagan
Sep 24, 2023,10:39 AM IST

சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்படுகின்றன.


விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், கடலில் கரைப்பதற்கும் சென்னை மற்றும் புறநகர் காவல்துறைகள் சார்பாக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.




விநாயகர் சதுர்த்தியையொட்டி, சென்னை மாநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உயர்நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப, காவல்துறை விதித்த நிபந்தனைகளுக்குட்பட்டு 1519 விநாயகர் சிலைகள் கடந்த 18ம் தேதி வைக்கப்பட்டன. இந்த விநாயகர் சிலைகளுக்கு தினசரி பூஜைகள் செய்யப்பட்டு வழிபட்டு வரப்பட்டன.


இதைத் தொடர்ந்து நேற்று முதல் இந்த சிலைகள் கடலில் கரைக்கப்பட்டு வருகின்றன. நேற்று பாரதிய சிவசேனா அமைப்பினர் வைத்த சிலைகள் கடலில் கொண்டு போய் கரைக்கப்பட்டன. இன்று இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி ஆகியவை சார்பாக வைக்கப்பட்ட சிலைகள் கரைக்கப்படுகின்றன. காலை முதல் ஊர்வலமாக இவை எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டு வருகின்றன.




சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் நேரடி மேற்பார்வையில், அமைதியான முறையிலும், எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் வழிபாடு செய்யப்பட்டு, விநாயகர் சிலைகளை ஊர்வலம் எடுத்து செல்லவும், சிலைகளை நீர் நிலைகளில் கரைக்கவும் சென்னை பெருநகரில் 16,500 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள், 2,000 ஊர்க்காவல் படையினர் மூலமாக சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


விநாயகர் சிலைகளை கரைக்க காவல்துறை அனுமதிக்கப்பட்ட நாட்களில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள் மூலம் மட்டுமே விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு, அனுமதிக்கப்பட்ட சிலை கரைக்கும் இடங்களில் கரைக்கப்பட வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.  சிலை கரைக்கும் இடங்களில் தற்காலிக கட்டுப்பாட்டறைகள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 


சிலைகளை கரைப்பதற்கு கன்வேயர் பெல்ட் வசதியும் செய்யபட்டுள்ளது. அதில் சிலைகளை வைத்து விட்டால் பெல்ட் மூலமாக சிலைகள் நேரடியாக கடலுக்குள் போய் விடும். பெரிய சிலைகளைக் தூக்கி கடலில் போடுவதற்கு வசதியாக கிரேன்கள், படகுகள் உதவி கொண்டு சிலைகளை கரைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  சிலைகள் கரைக்கும் இடங்களில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 


அங்கு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு பைனாகுலர்கள் மூலம் கண்காணித்தும்,குதிரைப்படைகள் மற்றும் All Terrain Vehicle (Beach Buggies) மூலம் தீவிர ரோந்து பணிகள் மேற்கொண்டு கண்காணித்தும் குற்ற நிகழ்வுகள் மற்றும் அசம்பாவிதங்கள் நிகழாமல் கண்காணிக்க தக்க பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


சிலைகளைக் கரைக்க 4 இடங்கள்




சென்னை பெருநகரில் நிறுவியுள்ள விநாயகர் சிலைகளை  4 இடங்களில் கரைக்க சென்னையில் 17 வழித்தடங்கள் பிரத்யேகமாக வகைப்படுத்தப்பட்டு, அவ்வழியே விநாயகர் சிலைகளை கொண்டு சென்று சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்பட்டு அதற்கான சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


பொது இடங்களில் அனுமதியுடன் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை, காவல்துறையின் கட்டுப்பாடுகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உரிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடித்து அமைதியான முறையில் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைத்து காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு சென்னை பெருநகர காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.


காவல்துறையின் கட்டுப்பாடுகளை மீறுவோர் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை பெருநகர காவல்துறை எச்சரித்துள்ளது.