தென் தமிழ்நாட்டில்.. கன மழை நாளை வரை தொடரும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்

Su.tha Arivalagan
Dec 18, 2023,06:55 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களான நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் அதிக கன மழை நாளை வரை தொடரும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது இலங்கைக்கு தென்கிழக்கிலிருந்து குமரி கடல் பகுதியில் தொடர்ந்து நிலவிக் கொண்டிருக்கிறது. இது தற்போது 4 கிலோ மீட்டர் வேகத்தில் தான் நகர்கிறது. இதனால் நாளை வரையில் தென் மாவட்டங்களில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.




அதிக கன மழை எச்சரிக்கை:


குமரி, நெல்லை, தூத்துக்குடி ,தென்காசி, ஆகிய நான்கு மாவட்டங்களில் அதிக கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


மிக கனமழை எச்சரிக்கை :


தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கனமழை எச்சரிக்கை:


நீலகிரி, கோவை, திருப்பூர் ,திண்டுக்கல், மதுரை ,ராமநாதபுரம் ,ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  இதுதவிர, தற்போது அதி கன மழை பெய்வதற்கான காரணம் என்னவென்று வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்தரின் விளக்கியதாவது:


ஒரு வளிமண்டல சுழற்சி நிலவும் போது இந்த அளவுக்கு அதீத மழைப்பொழிவு என்பது இருக்காது. ஆனால் தற்போது அதிக மழைப்பொழிவு பெய்து வருகிறது. ஏற்கனவே 15 ,16 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என அறிவித்திருந்தோம். அதே போல் தான் தற்போது பெய்துள்ளது.


20 செமீக்கு மேல் பெய்தாலே சிவப்பு நிற எச்சரிக்கை என அறிவிக்கப்படும். அதற்காக 50 சென்டிமீட்டர் ,95 சென்டிமீட்டர் என பெய்தால் தனித்தனியாக எச்சரிக்கை என்பது கொடுக்க முடியாது. ஏனென்றால் கனமழை, மிக கனமழை, அதிக கனமழை என்று  மூன்று பிரிவுகளாக பிரிக்க முடியும். 


7 முதல் 11 சென்டிமீட்டர் அளவு மழை பெய்தால் அது கனமழை எனவும், 12 முதல் 20 செமீ வரை மழை பெய்தால் அது மிக கனமழை எனவும், 20 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்தால் அதை அதிக கன மழை என்றும் அறிவிக்க முடியும். ஒரு மாவட்டத்தில் எந்த அளவுக்கு மழை பொழியும் என்பதை குறிப்பிட்டு அறிவிக்க முடியாது.


ஏனென்றால் 20 சென்டிமீட்டருக்கு அதிகபட்சமாக எவ்வளவு மழை பெய்தாலும் அது அதிகன மழைக்கான ரெட் அலர்ட் என்று தான் குறிப்பிடுவோம். இனி வருங்காலத்தில் கனமழை என்பது அதிகரித்துக் கொண்டே‌ தான் செல்லும். மேலும் தற்போது பெய்யும் அதிக கன மழை மேக வெடிப்பினால் அல்ல. அது கனமழையாகத்தான் பெய்து வருகிறது என விளக்கம் அளித்தார்.


இந்த வருடம் மழைப்பொழிவு என்பது கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் 103 சதவீதம் இயல்பை விட   அதிகமாக பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 68 சதவீதம் இயல்பை விட அதிகமாகவும், தென்காசியில் 80% இயல்பை விட அதிகமாகவும் பெய்துள்ளது.