சாம்பியன்ஸ் டிராபி.. பிரதமர் மோடி மனசு வச்சா நடக்கும்.. பாகிஸ்தான் வீரர் பாசித் அலி நம்பிக்கை

Su.tha Arivalagan
Sep 01, 2024,10:53 AM IST

கராச்சி: பாகிஸ்தானில் நடைபெறவுள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடரில் இந்தியா பங்கேற்கவுள்ளது, பிரதமர் நரேந்திர மோடி கையில்தான் உள்ளது. அவர் நினைத்தால் நிச்சயம் இந்தியா பாகிஸ்தான் வந்து விளையாடும் என்று முன்னாள் வீரர் பாசித் அலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


சாம்பியன்ஸ் டிராபி போட்டி மீண்டும் நடைபெறவுள்ளது. அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் இப்போட்டியை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இப்போட்டித் தொடரில் இந்தியா பங்கேற்பது கேள்விக்குறியாக உள்ளது. அரசியல் காரணங்களால் கடந்த 2013ம் ஆண்டு முதல் பாகிஸ்தானுக்குச் சென்று இந்தியா கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாமல் உள்ளது. பாகிஸ்தானில் விளையாடுவதற்குப் பதில் நியூட்ரல் மைதானங்களில்தான் அந்த அணியை இந்தியா சந்தித்து வருகிறது.




2023ம் ஆண்டு நடந்த ஆசியா கோப்பைத் தொடரின்போதும் கூட பாகிஸ்தான் செல்ல இந்தியா மறுத்து விட்டது. இதனால் இந்தியா பங்கேற்ற போட்டிகள் இலங்கையில் நடைபெற்றன.  இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடரை நடத்த பாகிஸ்தான் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் போட்டிகள் பாகிஸ்தானில் வைக்கப்பட்டால் இந்தியா பங்கேற்காது என்று ஏற்கனவே ஜெய்ஷா கூறியிருந்தார். நடுநிலை மைதானத்தில் போட்டி நடந்தால் மட்டுமே இந்தியா கலந்து கொள்ளும் என்றும் அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது ஜெய்ஷா ஐசிசி தலைவராக தேர்வாகி விட்டார்.

 

இந்தச் சூழ்நிலையில் முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாசித் அலி இதுகுறித்துக் கூறுகையில், பிரதமர் மோடி மனசு வைத்தால் எல்லாம் நடக்கும். அவர் முடிவெடுத்தால் நிச்சயம் இந்தியா, பாகிஸ்தானுக்கு வந்து விளையாடும். இல்லாவிட்டால் ஐசிசிதான் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.


இன்னொரு முன்னாள் பாகிஸ்தான் வீரரான டேனிஷ் கனேரியா கூறுகையில், பாகிஸ்தானுக்கு வந்து இந்தியா விளையாடக் கூடாது. மாறாக துபாயில் போட்டியை நடத்தலாம். அதுதான் சரியான முடிவாக இருக்கும். தற்போது பாகிஸ்தான் உள்ள சூழலில் இந்திய அணி வருவது சரியாக இருக்காது. பாகிஸ்தான் இதுகுறித்து சிந்திக்க வேண்டும் என்றார் அவர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்