விவாகரத்து கேட்கும் ஜெயம் ரவி... மறுக்கும் மனைவி... அடுத்து என்ன நடக்கும்? சட்ட நடைமுறை என்ன?

Aadmika
Sep 11, 2024,06:22 PM IST

சென்னை :   நடிகர் ஜெயம் ரவி, திருமணமாகி 18 ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய மனைவியை பிரிய போவதாக அறிவித்தது தான் கடந்த சில நாட்களாக ஹாட் டாப்பிக்காக மீடியாக்களிலும், சோஷியல் மீடியாவிலும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக, ஜெயம் ரவியின் அறிக்கைக்கு நேர் மாறாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார் அவரது மனைவி ஆர்த்தி.


தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் ஜெயம் ரவி. தற்போதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஜெயம் ரவி- ஆர்த்தி தம்பதிக்கு 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இந்த ஆண்டு செப்டம்பர் 06ம் தேதி தன்னுடைய மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்தார். இதைத் தொடர்ந்து குடும்ப நல கோர்ட்டிலும் ஜெயம் ரவி சார்பில் விவாகரத்து மனு செப்டம்பர் 10ம் தேதியான நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் தன்னுடைய மனைவி ஆர்த்தியிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டும் என்றும், 2009ம் ஆண்டு நடந்த திருமணம் செல்லாது என்று ரத்து செய்ய வேண்டும் என கேட்கப்பட்டிருந்தது.


இந்நிலையில் இன்று ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜெயம் ரவியின் அறிவிப்பு எனக்கு அதிர்ச்சியையும், கவலையையும் தருகிறது. இது அவர் தன்னிச்சையாக, ஒரு தலைபட்சமாக எடுத்த முடிவாகும். குடும்ப நலனுக்காக எடுக்கப்பட்டது கிடையாது. என்னுடைய கணவரிடம் நேரடியாக மனம் விட்டு பேச நான் பல முறை முயற்சித்தும் அது முடியவில்லை. என்னுடைய இரண்டு குழந்தைகளும், நானும் என்ன செய்வது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளோம். ஜெயம் ரவி விவாகரத்தை அறிவித்த பிறகு என்னை பற்றி சோஷியல் மீடியாக்களில் பரவும் தகவல்கள் உண்மையற்றது. ஒரு தாயாக முதலில் என்னுடைய குழந்தைகளின் நலன் தான் எனக்கு முக்கியம் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.




விவாகரத்தை அறிவித்ததுடன், கோர்ட்டில் மனு தாக்கல் செய்யும் வரை சென்று விட்டார் ஜெயம் ரவி. ஆனால் இது அவராக எடுத்த முடிவு. தனக்கு அதில் எந்த தொடர்பும் இல்லை என கூறி உள்ளார் அவரது மனைவி ஆர்த்தி. இதனால் அடுத்து என்ன நடக்கும்? இதில் சட்ட ரீதியான நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.


மியூச்சுவல் விவாகரத்து என்றால்..


பொதுவாக விவாகரத்து வழக்குகளில் கணவன்-மனைவி இருவரும் பேசி, முழு சம்மதத்துடன், விருப்பப்பட்டு பிரிவதாக முடிவெடுத்தால், அந்த வழக்கில் 3 மாதங்களுக்கும் விவாகரத்து வழங்கப்பட்டு விடும். அதிலும் மனைவியின் தரப்பில், கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் போன்ற எதுவும் தேவையில்லை என சொல்லி விட்டாலும், ஒருவேளை ஜீவனாம்சம் கேட்டு, அதை தருவதற்கு கணவர் தரப்பில் ஒப்புக் கொண்டாலும் வழக்கு சுலபமாக முடிந்து, தீர்ப்பு வந்து விடும். அதற்கு முன்பாக கணவன்-மனைவி சேர்ந்து வாழ்வதற்கும், முடிவை மறு பரிசீலனை செய்வதற்கு கோர்ட் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கும். கவுன்சிலிங் வழங்கப்படும். அப்படியும் அவர்கள் மனம் மாறாமல், தங்களின் முடிவில் உறுதியாக இருந்தால் அதற்கு பிறகு தான் விவாகரத்து வழங்கப்படும்.


மனைவி விவாகரத்து தர மறுத்தால்..


அதே சமயம்,  கணவன் அல்லது மனைவி இருவரின் யார் ஒருவர் விவாகரத்து தர மறுத்தாலும், சேர்ந்து வாழ விரும்பினாலும், விவாகரத்து கேட்பவர் அதற்காக கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லாமல் போனாலும் வழக்கு விசாரணை நடந்து கொண்டே இருக்கும். தீர்ப்பு வழங்கப்படாது. மாறாக கணவன் - மனைவி இருவருக்கும் கோர்ட் மூலமாக கவுன்சிலிங் தரப்படும். கணவன்-மனைவி இருவரையும் அழைத்து அவர்கள் தரப்பு பிரச்சனைகள் குறித்து கேட்டு, சமரசம் செய்வதற்கு முயற்சி செய்யப்படும். 


கணவன்-மனைவி இருவரும் தனியாக பேசி முடிவு எடுக்கவும் வாய்ப்பு வழங்கப்படும். இந்த முயற்சிகளில் விவாகரத்து கேட்டவர் தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்ளவோ அல்லது சேர்ந்து வாழ வேண்டும் என்றவர் வேறு வழி இல்லாமல் விவாகரத்து தரவும் முன் வர வாய்ப்புள்ளது. இப்படி கணவன்-மனைவி இருவரும் ஒருமித்த முடிவுக்கு வந்த பிறகே அந்த விவாகரத்து மனு மீது தீர்ப்பு வழங்கப்படும்.


தற்போது ஆர்த்தி விடுத்துள்ள அறிக்கையைப் பார்க்கும்போது அவர் விவாகரத்து பெற விரும்பவில்லை என்பது தெளிவாகியுள்ளது. அத்தனை சீக்கிரம் அவர் விவாகரத்து கொடுக்கவும் மாட்டார் என்று தெரிகிறது. எனவே இந்த விவகாரமும் அத்தனை சீக்கிரம் முடியாது என்றும் தெரிகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்