எதுக்கு இந்த சம்மன்.. நாளைக்கும் நான் ஆஜராகாட்டி என்ன செய்வீங்க..கோபமாக கேட்ட சீமான்

Manjula Devi
Feb 27, 2025,05:00 PM IST

சென்னை: நான்தான் ஆஜராவேன்னு சொல்லிட்டேன்ல. அதுக்குப் பின்னாடியும் எதுக்கு இந்த சம்மன். நான் நாளைக்கு ஆஜராக மாட்டேன்.. என்ன செய்வீர்கள்.. என  காட்டமாக பதில் அளித்துள்ளார்.


நடிகை விஜயலட்சுமி கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் சென்னை  வளசரவாக்கம் போலீசார் சீமானின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு விசாரணையில் ஆஜராகும் படி சீமானுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகாததால்  அவரது வீட்டிற்கே சென்று  மேலும் ஒரு சம்மனை போலீசார் ஒட்டினர். இதில் சீமான் நாளை காலை 11 மணிக்கு ஆஜராக வேண்டும் இல்லையென்றால் கைது செய்யப்படுவார்  என குறிப்பிடப்பட்டிருந்தது.


ஆனால் சம்மன் ஒட்டிய  சில மணி நேரத்திலேயே வீட்டிலிருந்தவர் சம்மனை கிழித்து இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த போலீசார் விசாரணை மேற்கொள்ள சென்ற போது வீட்டின் பாதுகாவலருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு கைகலப்பானது. அப்போது பாதுகாவலரை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து குண்டு கட்டாக போலீஸ் வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 




இதனால் சீமான் வீடு இருக்கும் நீலாங்கரை பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் சீமான் நாளை ஆஜராக வேண்டும் இல்லையென்றால் கைது செய்யப்படுவார் என்ற எச்சரிக்கை விடுத்தும்  தற்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நான் ஆஜராக மாட்டேன். என்ன செய்வீர்கள் என செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் அளித்துள்ளார்.


அவரது வீட்டில் இன்று நடந்த அமளி துமளி குறித்து செய்தியாளர்கள் சீமானிடம் கேட்டதற்கு,  இதெல்லாம் அவசியமற்றது. கேவலமான நடவடிக்கை. சம்மன் ஒட்டி விசாரணைக்கு அழைப்பதால்  எனக்கு அசிங்கம் இல்லை. ஆட்சியாளர்கள் தான் அவர்களது செயலால் அசிங்கப்பட போகிறார்கள். இவ்வளவு தீவிரம் காட்டுகிற நீங்கள் பொள்ளாச்சி வழக்கில், அண்ணா பல்கலைக் கழக வழக்கில் இவ்வளவு ஆர்வம் காட்டவில்லையே.


அரசு ஏற்கனவே அழைப்பாணை கொடுத்த போது கையெழுத்திட்டு நான் விளக்கம் அளித்து தானே வந்தேன். இவ்வளவு விரட்ட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது. இந்த அரசு வேறு எதிலாவது இதுபோன்று நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்று பாருங்கள்.


எவ்வளவு கேவலமான ஆட்சி அதிகாரத்தை நடத்திக் கொண்டு எந்த  வழக்கிலவது இப்படி பண்ணியிருக்கிறதா? வரேன் என்று கூறிவிட்டேன். என் வீட்டில் மனைவி குழந்தைகள் வீட்டில் வேலை செய்கிறவர்கள், எல்லாரும் இருக்கிறார்கள். நான் கிருஷ்ணகிரியில் தான் இருக்கிறேன் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்புறம் எதற்கு என் வீட்டில் ஒட்டுகிறீர்கள். இது சேட்டை தானே.


சம்மனை ஒட்டிவிட்டு போன பிறகு என் தம்பியை விட்டு கிழித்துவிட்டார்கள். அதில் என்ன பிரச்சினை உங்களுக்கு. நான் தான் வருவேன் என்றால் வருவேன் இல்லை. ஏற்கனவே நீங்கள் விசாரித்ததற்கு நான் பதில்  கூறியவன் தானே. ‌ வராமல் போய்விடுவேனா. பயந்து ஒளிந்து கொள்ள உங்களைப்போல் நான்  கோழை இல்லை. நான் தான் வருவேன் என்று கூறி விட்டேன்‌. அப்பறம் எதற்கு இந்த வேலையை செய்கிறீர்கள். நான் அசிங்கப்பட்டு விடுவேன் என்று நினைக்கிறீர்களா..?


நாளைக்கு வந்து ஆக வேண்டுமென்றால்.. நான் வரமாட்டேன். என்ன செய்வீர்கள். சம்பந்தப்பட்ட நபரை அழைத்து வந்து என் எதிரே உட்கார வைத்து விசாரியுங்கள். 15 வருடமாக எதற்கு இந்த நாடகம். மக்கள் முன் இந்த அரசு என்ன சொல்ல நினைக்கிறது. விசாரிக்கவே இல்லை. இதுதான் நடந்திருக்கிறது என்று நீங்களாகவே ஏன் முடிவு செய்கிறீர்கள். 


இதற்கெல்லாம் பயந்து ஓடமாட்டேன்.  நாளைக்கு 11 மணிக்கு வந்தாகவேண்டும் என்கிறார்கள். வரமுடியாது. அவர்களால் முடிந்ததை பார்த்துக்கொள்ளட்டும். நாளை தர்மபுரி கலந்தாய்வு கூட்டத்திற்கு போகிறேன். வளசரவாக்கம் காவல்நிலையம் அங்குதான் இருக்கிறது. நான் இங்குதான் இருக்க போகிறேன். என்னால் வரமுடியாது என்றார் சீமான்.


சீமானின் பேட்டி மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது. சீமான் நாளை ஆஜராகாவிட்டால் தர்மபுரியில் வைத்து அவரைக் கைது செய்ய காவல்துறை முடிவு செய்யலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுவதால் அனைவரின் கவனமும் நாளை தர்மபுரி பக்கம் திரும்பவுள்ளது.