ICC World Cup 2023: உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா.. நாளை முதல்..!

Su.tha Arivalagan
Oct 04, 2023,04:24 PM IST

- மஞ்சுளா தேவி


அகமதாபாத்: ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை அகமதாபாத்தில் தொடங்குகிறது. கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெறவுள்ள இந்த திருவிழாவில் இந்தியா கோப்பையை வெல்லுமா என்ற பெருத்த எதிர்பார்ப்பில் நமது ரசிகர்கள் உள்ளனர்.


2023க்கான ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. இது உலகக்கோப்பை தொடரின் 13 வது சீசன் ஆகும். உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். 50 ஓவர்களை கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக் கோப்பைத் தொடர் இது.


மொத்தம் 10 அணிகள்




இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ,தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து என மொத்தம் பத்து அணிகள் பங்கு பெறுகின்றன. இந்த பத்து அணிகளும் மொத்தம் 45 சுற்றுப் போட்டிகளில் மோதவுள்ளன. 2 அரை இறுதிப் போட்டிகள் மற்றும் இறுதிப் போட்டியைச் சேர்த்து மொத்தம் 48 போட்டிகள் நடைபெறவுள்ளன.


உலகக் கோப்பைப் போட்டிகள் மும்பை, ஹைதராபாத்,  அகமதாபாத், புனே, சென்னை, பெங்களூரு, தரம்சலா, கொல்கத்தா, லக்னோ, டெல்லி ஆகிய நகரங்களில் நடைபெறவுள்ளன. மும்பை மற்றும் கொல்கத்தாவில் அரை இறுதிப் போட்டிகள் நடைபெறும். இறுதிப் போட்டி நவம்பர் 19ம் தேதி அகமதாபாத்தில் உள்ள இந்தியாவின் மிகப் பிரமாண்டமான ஸ்டேடியாக வர்ணிக்கப்படும் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும். 


2 முறை இந்தியாவுக்கு கோப்பை


இந்தியா இதுவரை 2 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. கபில்தேவ் தலைமையில் இந்தியா 1983 ஆம் ஆண்டு முதன் முறையாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது. அதன் பின்னர் 2011 ஆம் ஆண்டு தோனி தலைமையில் இரண்டாவது முறை சொந்த மண்ணில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை வென்றது. 




தற்போது 2023க்கான தொடரும் இந்தியாவிலேயே நடைபெறுவதால், ரோஹித் சர்மா தலைமையில் மீண்டும் இந்தியா கோப்பையை வென்று அசத்துமா என்ற பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.


ஐந்து முறை ஆஸ்திரேலியா


இந்நிலையில் எந்தத் தொடரிலும் இல்லாத அளவிற்கு உலகக்கோப்பை தொடரில் மற்ற நாடுகளை வென்று இந்தியா சாம்பியன்ஷிப்பை கைப்பற்ற போகும் நிகழ்வை பார்க்க ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதேசமயம், அதிகபட்சமாக ஆஸ்திரேலியா ஐந்து முறை உலக கோப்பையை தொடரை வென்றுள்ளது.




உலகக் கோப்பையைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா ஒரு வலுவான அணியாகும் என்பதால் அந்த அணி இந்தத் தொடரில் பெரும் சவாலாக இருக்கும். நாளை நடைபெறவுள்ள முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஆன இங்கிலாந்தும் - நியூசிலாந்தும் மோத உள்ளன. முதல் போட்டி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 2 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.