நம்பர் 1 சுப்மன் கில்.. பாபர் ஆஸம் அவுட்.. முகம்மது சிராஜும் அசத்தல்.. ஐசிசி தரவரிசைப் பட்டியலில்!

Su.tha Arivalagan
Nov 08, 2023,03:22 PM IST
துபாய்: ஐசிசி ஒரு நாள் போட்டிக்கான பேட்டிங் மற்றும் பவுலிங் தரவரிசைப் பட்டியலில் இந்தியர்கள் முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.

இதுவரை பேட்டிங்கில் முதலிடத்தில் இருந்து வந்த பாகிஸ்தானின் பாபர் ஆஸம் பின்னுக்குத் தள்ளப்பட்டு சுப்மன் கில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அதேபோல பந்து வீச்சிலும் இந்தியாவின் முகம்மது சிராஜ் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இந்திய வீரர்களில் விராட் கோலி 4வது இடத்தில் இருக்கிறார். 

நடப்பு உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் இந்தியா அசத்தலாக ஆடி வருகிறது. இதுவரை தோல்வியே காணாத அணியாக சர்வ வல்லமையுடன் அது வலம் வருகிறது. பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் இந்திய வீரர்கள் அசத்திக் கொண்டுள்ளனர். இது ஐசிசி தரவரிசையில் அவர்களுக்கு நல்ல உயர்வைக் கொடுக்க உதவியுள்ளது.



பேட்டிங் தரிவரிசையில் இந்தியத் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். பந்துவீச்சில் இந்தியாவின் முகம்மது சிராஜ் முதலிடம் வந்துள்ளார். இதுவரை பேட்டிங்கில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம்தான் முதலிடத்தில் இருந்தார். ஆனால் உலகக் கோப்பைத் தொடரில் அவரது மோசமான ஆட்டம் அவரை தரவரிசைப் பட்டியலில் பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. 

ஐசிசி தரவரிசைப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய 4வது இந்திய வீரராக உருவெடுத்துள்ளார் சுப்மன் கில். இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கர், தோனி, விராத் கோலி ஆகியோர் முதலிடத்தில் இருந்துள்ளனர். 

கடைசி சில போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி  அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றியதால் முகம்மது சிராஜும் தரவரிசையில் முதலிடத்திற்கு எளிதாக முன்னேறி வந்து விட்டார். 

நடப்பு உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் சுப்மன் கில் இதுவரை 219 ரன்களை எடுத்துள்ளார். மறுபக்கம் பாபர் ஆஸம், 282 ரன்களை எடுத்துள்ளார். இருப்பினும் கில்லை விட 6 புள்ளிகள் குறைந்திருப்பதால் பாபர் ஆஸம் 2வது இடத்திற்கு வந்து விட்டார். கடந்த 2 வருடத்திற்கும் மேலாக பாபர் ஆஸம் முதலிடத்தில் இருந்து வந்தார் என்பது நினைவிருக்கலாம்.