கலவரத்தில் சிக்கிய வங்கதேசம்.. மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் நடக்குமா.. இந்தியாவுக்கு மாறுமா?

Meenakshi
Aug 06, 2024,06:27 PM IST

டெல்லி:   மகளிர் டி20 உலக கோப்பை போட்டி வங்கதேசத்தில் நடக்க திட்டமிட்டிருந்த நிலையில் தற்போது பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி இந்தத் தொடர் வங்கதேசத்தில் நடக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.


வங்கதேசத்தில் பெரும் அரசியல் சூறாவளி வீசி வருகிறது. அரசுக்கு எதிரான போராட்டம் வன்முறையாக மாறி பெரும் கலவரம் வெடித்தது. இதையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவுக்கு வந்து விட்டார். வங்கதேச ராணுவம் தற்போது ஆட்சியை கையில் எடுத்துள்ளது. ராணுவத்தின் துணையுடன் இடைக்கால ஆட்சி அமையவுள்ளது.




இந்த நிலையில் மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரை வரும் அக்டோபர் மாதம் வங்கதேசத்தில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள பெரும் குழப்ப நிலையால் திட்டமிட்டபடி இது நடக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. வங்கதேசத்தின் நிலைமை சீராகும் பட்சத்தில் ஐசிசி திட்டமிட்ட படி போட்டியை வங்கதேசத்தில் நடத்தும் என்று கூறப்பட்டாலும், இந்த திட்டத்தில் மாற்றம் நிகழலாம் என்றும் தகவல்களும் வெளியாகியுள்ளன.


பாதுகாப்புக்கு கேள்விக்குறி ஏற்படலாம் என்ற அச்சம் இருப்பதால் போட்டித் தொடரை இந்தியா அல்லது வேறு நாட்டுக்கு மாற்றவும் ஐசிசி திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது.  நிலைமையை ஐசிசி உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், வரும் நாட்களில் இதுகுறித்த ஒரு தெளிவு ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.