பக்கா சேசிங்.. 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை காலி செய்தது ஆப்கானிஸ்தான்

Su.tha Arivalagan
Oct 23, 2023,10:23 PM IST

சென்னை: சென்னையில் நடந்த உலகக் கோப்பைப் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி, வலிமை வாய்ந்த பாகிஸ்தானை வீழ்த்தி புதிய சாதனை படைத்தது.


நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் ஜாம்பவான் அணிகளுக்கு பெரும் சவாலாக விளங்கி வருகிறது ஆப்கானிஸ்தான். முதலில் இங்கிலாந்து அணியை துவம்சம் செய்து அவர்கள் வென்ற விதம் அனைவரையும் அதிர வைத்தது. இன்று 2வது அதிர்ச்சி வைத்தியத்தை அளித்துள்ளதுஆப்கானிஸ்தான்.




சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடந்த போட்டியில் பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் மோதின. முதலில் பாகிஸ்தான் பேட் செய்தது. அவர்களுக்கு சேப்பாக்கம் மைதானம் எப்போதுமே ராசியானது. ஆனால் இன்று மோசமான அனுபவத்தைக் கொடுத்து விட்டது சென்னை மைதானம்.


ஆப்கானிஸ்தான் அணி அட்டகாசமாக பவுலிங் செய்து பாகிஸ்தானை நிலை குலைய வைத்து விட்டது. ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர்கள் மிக மிக நேர்த்தியாக பந்து வீசினர். பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் குறிப்பாக பாபர் ஆசம், முகம்மது ரிஸ்வான், இமாம் உல் ஹக் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவருமே ரன் எடுக்க கடுமையாக போராட வேண்டியதாகி விட்டது. அந்த அளவுக்கு ஆப்கானிஸ்தான் பந்து வீச்சு அபாரமாக இருந்தது.


குறிப்பாக ஸ்பின்னர் நூர் பிரமாதமாக பந்து வீசி 3 விக்கெட்களைச் சாய்த்தார்.  தொடக்க ஆட்டக்காரர்கள் அப்துல்லா ஷபீக் கடுமையாக போராடி 58 ரன்களை எடுத்தார். இமாம் உல் ஹக் 17 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் பாபர் ஆசம் 74 ரன்களை எடுத்தார். இதுவும் போராடியே வந்தது. பின்னர் வந்த ஷதாப் கான் 40, இப்திகார் அகமது 40 ரன்கள் எடுத்ததால்தான் பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 282 ரன்களை எடுக்க முடிந்தது. 




பின்னர் சேசிங் செய்ய வந்த ஆப்கானிஸ்தான் அணி அட்டகாசமாக பேட் செய்தது. இப்படி ஒரு நேர்த்தியான சேசிங்கை நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் எந்த அணியும் ஆடியதில்லை. அப்படி ஒரு அம்சமான ஆட்டத்தை ஆப்கானிஸ்தான் அணி வெளிப்படுத்தியது. பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் என்னென்னவோ செய்தும் கூட ஆப்கானிஸ்தானை முடக்கிப் போட முடியவில்லை. ரஹ்மதுல்லா குர்பாஸ் 65 ரன்களைக் குவித்தார். இப்ராகிம் ஜட்ரான் 87 ரன்களைக் குவித்து மிரட்டினார். பின்னர் வந்த ரஹ்மத் ஷாவும், ஹஸ்மதுல்லா ஷாஹிதியும் பிரித்து மேய்ந்து விட்டனர். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் முறையே 77, 48 ரன்களைக் குவித்து ஆப்கானிஸ்தானை வெற்றி பெற வைத்தனர்.


ஆப்கானிஸ்தானுக்கு இது மிகப் பெரிய வெற்றி. அதேசமயம், பாகிஸ்தானுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி. இன்றைய ஆட்டம் மொத்தமும் ஆப்கானிஸ்தானுக்கே உரியதாக மாறிப் போனது.. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என எல்லாவற்றிலும் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி விட்டு ஆதிக்கம் செலுத்தியது ஆப்கானிஸ்தான்.