15 வருடமாக "சிக் லீவு".. ஊதிய உயர்வு தரவில்லை என்று கூறி கோர்ட்டுக்குப் போன ஊழியர்!

Su.tha Arivalagan
May 15, 2023,12:08 PM IST
கலிபோர்னியா: ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவர் கடந்த 15 வருடமாக உடல் நலம் சரியில்லாததால் லீவில் இருந்து வருகிறார்.  இந்த நிலையில் தனக்கு ஊதிய உயர்வு தரவில்லை என்று கூறி  அவர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த ஊழியரின் பெயர் இயான் கிளிப்போர்ட். ஐபிஎம் நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜீனியராக இருக்கிறார். இவருக்கு உடல் நலம் சரியில்லை. இதனால் 2008ம் ஆண்டிலிருந்து சிக் லீவில் இருந்து வருகிறார் இயான் கிளிப்போர்ட். இந்த நிலையில் 2013ம் ஆண்டு முதல் இவர் மருத்துவ ரீதியாக உடல்நல பாதிப்பு காரணமாக பணியாற்றவில்லை. ஆனால் விடுமுறையை நீட்டித்து வருகிறார்.

இந்த நிலையில் தனக்கு உடல் நல பாதிப்பு இருப்பதைக் காரணம் காட்டி ஊதிய  உயர்வு மறுக்கப்படுவதாக ஐபிஎம் நிறுவனம் மீது கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளார் இயான் கிளிப்போர்ட். தற்போது இயான் கிளிப்போர்டுக்கு வருடந்தோறும் 55 லட்சத்து 30 ஆயிரத்து 556 ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. இந்த சம்பளத்தை அவரது 65 வயது வரை தருவதாகவும் ஐபிஎம் நிறுவனம் உறுதியளித்துள்ளது. ஆனால் இது போதாது என்று கூறி வழக்கு தொடர்ந்துள்ளார் இயான் கிளிப்போர்ட்.

நாளுக்கு நாள் பணவீக்கம் அதிகரிக்கும் என்பதால் தன்னால் இந்த குறைந்த சம்பளத்தை வைத்து மீதக் காலத்தை ஓட்ட முடியாது என்பது கிளிப்போர்டின் வாதமாகும். 

2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் முறையாக இவர் விடுப்பில் போனார். பின்னர் விடுப்பை நீட்டிக்க ஆரம்பித்தார். இதையடுத்து இவரது உடல் நிலை குறித்து ஐபிஎம் நிறுவனம் ஆராய்ந்தது. அவரது நிலையை கருத்தில்கொண்டு பரிவுடன் ஒரு செயல்திட்டத்தை ஐபிஎம் முன் வைத்தது. அதன்படி உங்களை டிஸ்மிஸ் செய்ய மாட்டோம். அதேசமயம், உங்களுக்கு வருடந்தோறும் ஒரே ஊதியத்தைத் தருகிறோம். நீங்கள் வேலை செய்யாவிட்டாலும் அந்த ஊதியம் உங்களுக்கு வழங்கப்படும் என்று கூறி அதை கிளிப்போர்டும் ஏற்றுக் கொண்ட பின்னர் அந்த ஊதியம் தற்போது தரப்பட்டு வருகிறது.

ஆனால் இப்போது இது தனக்குப் போதாது என்று கூறி சட்டப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார் இயான் கிளிப்போர்ட். உலகம் முழுவதும் ஆட்குறைப்பு தாறுமாறாக நடந்து வருகிறது. இந்த நிலையில் இயான் கிளிப்போர்ட் செய்யாத வேலைக்கு தரப்படும் சம்பளம் போதாது என்று கிளம்பியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.