லோக்சபா தேர்தல் நிலைப்பாடு.. "ஒரு வாரம் கழித்து விரிவாக பேசுகிறேன்".. பிரேமலதா விஜயகாந்த்

Su.tha Arivalagan
Jan 28, 2024,06:08 PM IST

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நிலைப்பாடு உள்ளிட்டவை குறித்து இன்னும் ஒரு வாரம் கழித்து, தான் பதிலளிப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.


தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் டிசம்பர் 28ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கட்சிக் கொடிகள் அனைத்தும் அரைக் கம்பத்தில் பறந்து வந்தன. இந்த நிலையில் இன்று முதல் கொடிகளை முழுக் கம்பத்தில் பறக்க விட தேமுதிக தலைமை தீர்மானித்தது.


அதன்படி தேமுதிக தலைமைக் கழக அலுவலகத்தில் கட்சிக் கொடியை கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஏற்றி வைத்தார். அப்போது கொடிக் கயிறு பாதியிலே அறுந்து விழுந்தது. இதனால் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்டோர் அதிர்ச்சி அடைந்தனர். 




கொடி ஏற்றுதலுக்குப் பிறகு பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தேமுதிக அலுவலகத்தில் அரைக் கம்பத்தில் ஏற்றப்பட்டிருந்த கழகக் கொடியை கேப்டன் மறைவுக்குப் பிறகு அரைக் கம்பத்தில் பறக்க விட்டிருந்தோம். அது இப்போது முழுக் கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. இதேபோல தமிழ்நாடு முழுவதும் எல்லா ஊரிலும் முழுக் கம்பத்தில் ஏற்றியிருக்கிறோம். 


டிசம்பர் 28ம் தேதி கேப்டன் இறந்து விட்டார். இன்று ஜனவரி 28 . ஒரு மாதம் கழித்து முழுக் கம்பத்தில் ஏற்ற முடிவு செய்தோம். அதன்படி ஏற்றினோம். ஏற்றும்போது கொடி கயிறு அறுந்து விழுந்துருச்சு. எப்போதுமே சொல்வார்கள், ஒரு தடைக்குப் பிறகுதான் முழு வெற்றி கிடைக்கும் என்று சொல்வார்கள். இன்னிக்கு கழகக் கொடி கயிறு அறுந்தது, அத்தனை தடைகளையும் உடைத்தெறிந்து தேமுதிகவின் கொடி பட்டொளி வீசும். 




விஜயகாந்த் லட்சியத்தை நாங்கள் நிச்சயம் அடைவோம். ஒரு மாதம் கழித்து இன்று தேமுதிக கொடி முழுமையாக ஏற்றியிருக்கிறோம். விஜயகாந்த் மணிமண்டபம் தொடர்பான  பணிகள் தொடங்கியுள்ளன. வள்ளல் விஜயகாந்த் டிரஸ்ட் தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக அன்னதானம், உள்ளிட்ட அனைத்து உதவிகளும் செய்யப்படும். பிறந்த நாள், கட்சி நாள்,  கொடி நாள், கேப்டன் மறைவு நாள் என அவர் பெயர் புகழ் சொல்லும்படி இன்னும் பல்வேறு உதவிகளை செய்வோம். 


இந்த இடம் ஜீவ சமாதியாக, ஒரு கோவிலாக அவர் புகழ் பரப்பும்படி அமையும். கேப்டன் இறந்து ஒரு மாதம்தான் ஆகிறது. நான் அரசியல் பேச விரும்பலை.  ஒரு வாரம் கழித்து தலைமைக் கழகத்திற்கு அழைக்கிறேன்.. அப்போது நீங்கள் கேட்கும் அனைத்துக் கேள்விகளுக்கும், அரசியல் உள்பட அனைத்துக்கும் பதிலளிக்கிறேன் என்று கூறினார் பிரேமலதா விஜயகாந்த்.