அண்ணாமலையை தமிழ்நாட்டின் முதல்வராக்குவேன்.. திருச்சி சூர்யா சிவா அதிரடி!

Su.tha Arivalagan
Nov 03, 2023,04:53 PM IST
சென்னை: பாஜகவில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ள திருச்சி சூரியா தான் ஒரு பீனிக்ஸ் பறவையானதாக கூறியுள்ளார். மேலும் அண்ணாமலையை தமிழ்நாட்டின் முதல்வராக்க முனைப்புடன் பாடுபடப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

திமுக  ராஜ்யசபா எம்.பி. திருச்சி  சிவாவின் மகன்தான் சூர்யா சிவா. பாஜகவில் இணைந்து இவர் தீவிரமாக செயலாற்றி வந்தார். இவரது அதிரடி அரசியலுக்கு அண்ணாமலையின் பரிபூரண ஆதரவும் இருந்ததால் இவரது கை சற்று ஓங்கியே இருந்தது. 

இந்த நிலையில் பாஜக சிறுபான்மைப் பிரிவு செயலாளர் டெய்சியுடன் ஏற்பட்ட வாய்ச் சண்டை விவகாரம் வெளியில் வந்து சர்ச்சைக்குள்ளானார் சூர்யா சிவா. இதையடுத்து அவர் கட்சியின் பொறுப்புகளிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். சமீபத்தில் அவர் அதிமுகவில் இணயைப் போவதாக செய்திகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தின.



இந்தப் பின்னணியில் நேற்று திடீரென சூர்யா சிவா மீதான நடவடிக்கையை ரத்து செய்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிரடி உத்தரவிட்டார். இதன் மூலம் சூர்யா சிவா மீண்டும் பாஜகவில் தீவிரப் பணியாற்றவுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள டிவீட்டில் கூறியிருப்பதாவது:

ஃபீனிக்ஸ் பறவையானேன்..!

கடமை, கண்ணியம் என்ற வார்த்தைகளை முற்றிலுமாக மறந்து போன திராவிட அரசியலுக்கு எதிராக, கட்டுப்பாடு என்ற சொல்லின் பொருள் விளங்க அரசியல் போர் தொடுத்து, தொண்டர்கள் அனைவரையும் அரவணைப்பது போல மீண்டும் என்னை அரவணைத்து ஃபீனிக்ஸ் பறவையாக மாற்றிய எங்கள் அண்ணன் 
அண்ணாமலை, அவர்களுக்கும், அண்ணன் கேசவவிநாயகம் அவர்களுக்கும் எனக்கு தோள் கொடுத்து நின்ற மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

பாரதத்தாயின் முதல் மகன், தாய்நாட்டின் தலைமகன்,  பாரதத்தின் நிரந்தர பிரதமர் மாண்புமிகு மோடி ஜி அவர்களின் கனவினை நனவாக்க, அண்ணாமலை அவர்களை தமிழகத்தின் முதல்வராக்க முனைப்புடன் இனி செயல்படுவேன் என்பதை இந்த தருணத்தில் என் உறுதி மொழியாகவே அளிக்கிறேன் என்று கூறியுள்ளார் சூர்யா சிவா.