எதேச்சையாதான் பேசினேன்.. வடிவேலு வெற்றியின் பின்னாடி நாந்தான் இருந்தேன்.. சிங்கமுத்து

Meenakshi
Oct 03, 2024,03:56 PM IST

சென்னை: நடிகர் வடிவேலுவின் வெற்றியின் பின்னால் தான் இருந்ததாகவும், யூடியூப்களுக்கு அளித்த பேட்டியில் அவர் குறித்து கூறியது எல்லாமே உள்நோக்கம் இல்லாதது என்றும் நடிகர் சிங்கமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.


நடிகர் வடிவேலுவும், சிங்கமுத்துவும் இணைந்து டீமாக பல படங்களில் கலக்கியவர்கள். இவர்களது காமெடிக்கு சிரிக்காதவர்களே இருக்க முடியாது. ஆனால் இரண்டு பேரும் பின்னர் பெரும் மனக்கசப்புக்குள்ளாகி பிரிந்து விட்டனர். அதன் பின்னர் வடிவேலுவின் காமெடி பெரிய அளவில் எடுபடவில்லை, சிங்கமுத்துவும் பீல்ட் அவுட் ஆகி விட்டார். அந்த டீமே கலைந்து போய் விட்டது.




இந்த நிலையில், தன்னை பற்றி அவதூறாக யூ டியூப் சேனல்களுக்கு  பேட்டி அளித்ததற்காக ரூ.5 கோடி மான நஷ்டஈடாக  வழங்கும்படியும், நடிகர் சிங்கமுத்து தன்னை பற்றி அவதூறாக பேச அவருக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நடிகர் வடிவேலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.


இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி டீக்காராமன் முன்று இன்று விசாரணைக்கு வந்தது. நடிகர் சிங்முத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது" 


நடிகர் வடிவேலுவின் வெற்றிக்குப் பின்னால் நான் தான் இருந்தேன். நான் நடிப்பதை தடுக்கும் வகையில் என்னைப் பற்றி தயாரிப்பாளர்களிடம் தவறாக சித்தரித்தார். அவரைப் பற்றி பேட்டி அளிக்க தடை கேட்பதற்கு எந்த உரிமையும் அவருக்கு இல்லை. மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. 


நடிகர் வடிவேலு சொத்து வாங்கியதில் எந்த நிதி இழப்பையும் எதிர்கொள்ளவில்லை. என்னை துன்புறுத்தும் நோக்கில் வழக்கை நடிகர் வடிவேலு தாக்கல் செய்துள்ளார். நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதனையடுத்து .இந்த வழக்கின் விசாரணையை நீதிபதி அக்டோபர் 24ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்