"பிரதமர் கண்ணில் பயம்.. மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் இல்லை".. ராகுல் காந்தி

Su.tha Arivalagan
Mar 25, 2023,02:25 PM IST

டெல்லி: நான் நாடாளுமன்றத்தில் அதானியைப் பற்றிப் பேசும்போது பிரதமர் மோடி கண்ணில் பயத்தைப் பார்த்தேன். மன்னிப்பு கேட்பதற்கு நான் சாவர்க்கர் இல்லை என்று ராகுல் காந்தி கோபாவேசமாக கூறியுள்ளார்.


எம்.பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் ராகுல் காந்தி. அப்போது அவர் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.


ராகுல் காந்தியின் பேட்டியிலிருந்து சில துளிகள்:


நான் நாடாளுமன்றத்தில் அதானி குறித்துப் பேசியபோது  பிரதமர் மோடி கண்களில் பயத்தைப் பார்த்தேன். நான் பேசக் கூடாது என்பதாலேயே என்னை தகுதி நீக்கம் செய்துள்ளனர். என்னை சைலன்ஸ் செய்ய வேண்டும் என்பதே அவர்களது நோக்கம். 


நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்கிறார்கள். எனது பெயர் சாவர்க்கர் கிடையாது, நான் காந்தி. நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்.


இந்தியாவின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட வேண்டும் என்று நான் கூறியதாக பாஜக கூறுகிறது. ஆனால் அது உண்மை இல்லை. லண்டன் கூட்டத்தில் நான் பேசியது தொடர்பாக நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க அனுமதி வேண்டும் என்று தான் லோக்சபா சபாநாயகரிடம் கோரிக்கை வைத்திருந்தேன். அதை அவர்கள் ஏற்கவே இல்லை.


நான் இந்தியாவுக்கு எதிரான சக்திகளுக்கு உதவுவதாக பாஜக கூறுகிறது. இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு நான் லோக்சபாவில்தானே விளக்கம் அளிக்க முடியும். அதைத்தான் நான் கோரினேன். ஆனால் அவர் அனுமதிக்கவில்லை.


உண்மைக்கு ஆதரவாகவே நான் குரல் கொடுப்பேன். அதற்காக போராடுவேன். நாட்டின் ஜனநாயகத்தைக் காக்க பாடுபடுவேன்.  என்னை தகுதி நீக்கம் செய்யுங்கள், வாழ்நாள் முழுவதும் சிறையில் அடையுங்கள்.. நான் கவலையே பட மாட்டேன். தொடர்ந்து பேசுவேன்.


என்னைப் பார்த்தால் கவலை அடைந்திருப்பவன் போலவா இருக்கிறது.. மிகுந்த உற்சாகமாக இருக்கிறேன் என்றார் ராகுல் காந்தி.