தப்பு பண்ணிட்டேன்.. இனி கணிப்பு சொல்ல மாட்டேன்.. பிரஷாந்த் கிஷோர் அதிரடி முடிவு

Aadmika
Jun 08, 2024,05:35 PM IST

டில்லி : இனி தேர்தல்களில் கட்சிகள் எத்தனை சீட்களில் வெல்லும் என்பது குறித்து கணிப்புகளை வெளியிட மாட்டேன் என அரசியல் யுக்தி வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.


அரசியல் மற்றும் தேர்தல் முடிவுகளின் கணிப்புகளுக்கும், அரசியல் யுக்திகளுக்கும் பெயர் பெற்றவரான பிரஷாந்த் கிஷோர் 2024 லோக்சபா தேர்தல் குறித்து வெளியிட்ட கணிப்புகள் தவறாகி உள்ளதை அவரே பேட்டி ஒன்றில் ஒப்புக் கொண்டுள்ளார். அவர் தெரிவித்த லோக்சபா தேர்தல் கணிப்புகளின் படி பாஜக., மட்டும் 300 க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என கூறி இருந்தார். ஆனால் வெளியான தேர்தல் முடிவுகளில் பாஜக வெறும் 240 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. 


சமீபத்தில் அவர் அளித்த டிவி பேட்டி ஒன்றில், நானும் தேர்தல் கணிப்பாளர்களும் கணித்தது தவறாகி போய் விட்டதை ஒப்புக் கொள்கிறேன். இனி எப்போதும் எந்த தேர்தலிலும் தேர்தல் இடங்கள் குறித்த எண்ணிக்கை கணிப்பை தெரிவிக்க மாட்டேன். நான் என்னுடைய அனுமானங்களை மட்டுமே வெளியிட்டேன். ஆனால் நான் கணித்து சொன்ன எண்களில் 20 சதவீதம் மட்டுமே உண்மையாகி உள்ளது. அதே சமயம் என்னுடைய கணிப்பு ஒட்டுமொத்தமாக தவறு என சொல்லி விட முடியாது. 




ஏனெனில் பாஜக., 36 சதவீதம் ஓட்டு வங்கியை பெற்றுள்ளது. ஒரு யுக்தியாளராக இனி எண்ணிக்கைகளின் கணிப்புக்களை நான் பயன்படுத்த மாட்டேன். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே என்னுடைய கணிப்புக்களில் எண்ணிக்கையில் தவறு ஏற்பட்டு வருகிறது. ஏற்கனவே மேற்குவங்க சட்டசபை தேர்தலில் என்னுடைய கணிப்பு தவறானது. தற்போது 2024 லோக்சபா தேர்தலிலும் அது தவறாகி போய் விட்டது என தெரிவித்துள்ளார்.


சமீபத்தில் கரண் தாப்பர் ஷோவில் கூட மேற்கு வங்காள மாநிலத்தில் கணிப்பு தவறாகிப் போனது குறித்து கரண் தாப்பர் விடாமல் கேள்வி கேட்டார், அதற்கு பிரஷாந்த் கிஷோர் கடைசி வரை தான் தவறாக கணிக்கவில்லை என்றே பிடிவாதமாக கூறி வந்தார். ஆனால் அடுக்கடுக்காக கரண் தாப்பர் ஆதாரங்களை எடுத்து வைத்தபோது அதற்குப் பதிலளிக்க முடியாமல் தண்ணீர் குடித்து சமாளிக்க முயன்றார் பிரஷாந்த் கிஷோர் என்பது நினைவிருக்கலாம்.