Cervical Cancer விழிப்புணர்வுக்காக இறந்தது போல நாடகம்.. பூனம் பாண்டே பரபரப்பு வீடியோ!

Su.tha Arivalagan
Feb 03, 2024,06:03 PM IST

மும்பை: எது எதற்கெல்லாம் டிராமா போடுவது என்ற விவஸ்தையே இல்லாமல் போய் விட்டது. நடிகை பூனம் பாண்டே இறந்ததாக நேற்று செய்தி வெளியாகி பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. ஆனால் தான் சாகவில்லை.. அப்படி வெளியான செய்தி தான் போட்ட டிராமா என்று கூறி இன்று அதை விட பரபரப்பை அதிகரித்துள்ளார் பூனம் பாண்டே.


என்னதான் நல்ல நோக்கமாக இருந்தாலும் இப்படி ஒட்டுமொத்த நாட்டையும் தவறான செய்தியால் திசை திருப்பிய பூனம் பாண்டேவின் செயலை பலரும் கண்டித்து வருகின்றனர்.  புற்று நோய் விழிப்புணர்வை ஏற்படுத்த எத்தனையோ வழிகள் உள்ளன.. ஆனால் பூனம் பாண்டேவின் செயல் மிகவும் தவறானது என்று பலரும் கண்டித்துள்ளனர்.


கர்ப்பப் பை வாய் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக்காகவும், பெண்கள் இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவும், நல்ல நோக்கத்திற்காகவே தான் இறந்து போனதாக செய்தி வெளியிட்டதாகவும், அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கூறி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பூனம் பாண்டே.





நடிகை பூனம் பாண்டே எப்போதுமே சர்ச்சைகளை ஏற்படுத்துபவராகவே இருந்து வருகிறார்.  இதற்கு முன்பும் கூட அவர் பல சர்ச்சைகளில் சிக்கினார். ஆனால் இப்போது இவர் ஏற்படுத்திய சர்ச்சை பலரையும் அதிர வைத்திருக்கிறது. நேற்று பூனம் பாண்டேவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூனம் பாண்டே இறந்து போய் விட்டதாக கூறி அவரது குடும்பத்தினர் பெயரில் மெசேஜ் போடப்பட்டிருந்தது.  இதையடுத்து பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர்.


ஆனால் அவர் இறந்ததற்கான எந்த அறிகுறியும், பதட்டமும் எங்கும் தெரியவில்லை. அவரது உடல் காட்டப்படவில்லை. அதுவே பலரையும் குழப்பியது, சந்தேகத்தை கிளப்பியது. இந்த நிலையில் இன்று 2 வீடியோக்களைப் போட்டுள்ளார் பூனம் பாண்டே. அதில் ஒரு வீடியோவில், நான் சாகவில்லை.. உயிரோடுதான் இருக்கிறேன். கர்ப்பப்பை வால் புற்றுநோயால்  பலரும் இறக்கிறார்கள்.  பல ஆயிரம் பெண்கள் இதனால் இறந்துள்ளனர். இந்த நோய் குறித்த விழிப்புணர்வு மக்களிடம் வர வேண்டும். அது குணப்படுத்தக் கூடியதே.  சரியான நேரத்தில் சோதனை செய்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இதை நீங்கள் சரியாக செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.


இன்னொரு வீடியோவில்,  அனைவருக்கும் வணக்கம். முதலில் எனது மரணத்தை நான் போலியாக சித்தரித்ததற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் நல்ல நோக்கத்திற்காகத்தான் இதைச் செய்தேன். எனது மரணம் பலரையும் அதிர வைக்க வேண்டும். அதன் மூலம் இந்த புற்றுநோய் குறித்து மக்களுக்குத் தெரிய வேண்டும் என்று விரும்பினேன். நான் நினைத்தது போலவே, எனது மரணச் செய்தி, இந்த நோய் குறித்த விழிப்புணர்வைப் பரப்பியிருக்கிறது.. இதற்காக பெருமைப்படுகிறேன்.  இருப்பினும் எனது மரணச் செய்தியால் பலரும் வருத்தப்பட்டனர். அவர்களது மனங்களைப் புண்படுத்தியமைக்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் பூனம் பாண்டே.