4 கோடிக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை.. என்னைக் குறி வைக்கிறாங்க.. நயினார் நாகேந்திரன்

Su.tha Arivalagan
Apr 07, 2024,05:29 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இதனால் திசை திருப்புவதற்காக திமுக செய்த வேலைதான் இது. எனக்கும், சென்னையில் பிடிபட்ட ரூ. 4 கோடி பணத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.


சென்னையிலிருந்து நெல்லை சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சதீஷ், நவீன் உள்ளிட்ட 3 பேரை நேற்று பிடித்த தேர்தல் பறக்கும் படையினர் அவர்களிடமிருந்து ரூ. 4 கோடி பணத்தைப் பறிமுதல் செய்தனர். இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு சென்றதாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து நயினார் நாகேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. உண்மையாக இருந்தால்தான் நான் புகார் அளிக்க முடியும். கைு செய்யப்பட்டவர்கள் மட்டுமல்ல, திமுகவிலும் கூட எனக்கு வேண்டப்பட்டவர்கள் இருக்காங்க. அனிதா ராதாகிருஷ்ணன் கூட எனது நண்பர்தான். 




இது உள்நோக்கத்துடன் செய்யப்பட்டதா என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் என்னை டார்கெட் செய்கிறார்கள் என்று மட்டும் தெரிகிறது. நெல்லையைப் பொறுத்தவரை பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கறாங்க,. திமுகவின் திசை திருப்பும் வேலை இது. 


யாரிடமிருந்தோ பணத்தைப் பறிச்சிருக்காங்க. அதுக்கு நான் என்ன சொல்ல முடியும்.  மறைமுகமாக நெருக்கடி தர்றாங்க என்று அவர் கூறினார்.