"நான் தேசிய அரசியல்ல நுழைஞ்சுட்டேன்.. கூட்டணிக்கும் ரெடி".. நடிகர்  மன்சூர் அலிகான் அதிரடி!

Meenakshi
Jan 26, 2024,06:13 PM IST
சென்னை: எனது தமிழ் தேசிய புலிகள் கட்சியை இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற பெயரில் தேசியக் கட்சியாக மாற்றியுள்ளேன். எந்த கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைக்க தயார் என்று நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என்று தமிழ் சினிமாவில் பன்முகம் கொண்டவராக வலம் வரும் மன்சூர் அலிகான், சமூக செயல்பாடுகளிலும், அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். பல்வேறு அரசியல் கட்சிகளில் இணைந்து பயணித்தவர் தற்போது இந்திய ஜனநாயக புலிகள் என்ற பெயரில் தேசிய அரசியலில் களம் இறங்க உள்ளார். இதற்கான அறிவிப்பை இந்திய குடியரசுத் தினமான இன்று வெளியிட்டுள்ளார்.

கட்சியின் பெயர், கட்சியின் நோக்கம், கட்சியில் மூலம் தேசிய அளவில் இறங்க உள்ளதையும் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்திய ஜனநாயக புலிகள் இயக்கம் அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி குடியரசு தினமான இன்று மக்களுக்கு இனிப்பு வழங்கி குடியரசு தினத்தை நடிகர் மன்சூர் அலிகான் கொண்டாடினார். 



அதன் பின்னர்பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், தமிழ் தேசிய புலிகள் என்ற பெயரில் நான் ஏற்கனவே தொடங்கிய இந்த அமைப்பை தற்போது தேசிய அளவில் எடுத்துச் செல்வதற்காக இந்திய ஜனநாயக புலிகள் இயக்கம் என்று மாற்றியிருக்கிறேன். இதற்கான தொடக்கம் குடியரசு தின நாளில் தொடங்கியிருக்கிறேன்.

எளியவர்களை பதவியில் அமர்த்துவதோடு, ஆட்சி அதிகாரத்தில் அமர்த்த வேண்டும் என்பது தான் எங்கள் கட்சியின் நோக்கம். அதற்காக தீவிரமாக பயணிக்க இருக்கிறோம். இதற்காக இந்தியா முழுவதில் இருந்தும் நாங்கள் பொறுப்பாளர்களை நியக்க உள்ளோம், அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிடுவோம்.

மற்றவர்கள் எங்களை பயன்படுத்திவிட்டு ஏமாற்றியதை பார்த்து பார்த்து பெரும் பசியில் இருக்கிறோம், அதனால் எங்களுடைய அரசியல் இனி தீவிரமாக இருக்கும். அதேபோல் தடலாடியான பதவிகளும் வழங்கப்படும். வரும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு ஆதரவு தெரிவிப்போம் என்பது குறித்து எங்களது நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம். அந்த முடிவை விரைவில் நடைபெற உள்ள எங்கள் கட்சியின் மாநாட்டில் அறிவிப்போம். 



எந்த கட்சியுடனும் நாங்கள் கூட்டணி வைக்க தயாராக இருக்கிறோம், எங்கள் ஒரே நோக்கம் ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும் பதவியும், ஆட்சி அதிகாரமும் வழங்க வேண்டும் என்பதோடு, பெரியாரின் சித்தாந்தங்களை இந்தியா முழுவதும் பரப்புவதற்காக அவருடைய வழியிலும் தீவிரமாக பயணிப்போம்.” என்றார்.

கடந்த சட்டசபைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டிருந்தார் மன்சூர் அலிகான். அப்போது அவர் செய்த பிரச்சாரத்தையும், அதிரடிக் காட்சிகளையும் திண்டுக்கல் மக்கள் இன்னும் கூட மறக்கவில்லை. காய்கறி விற்றார்.. கறி வெட்டினார்.. தோசை சுட்டார்.. துணி துவைத்தார்.. கலக்கோ கலக்கென்று கலக்கினார். அதேபோல அரசியலிலும் பல கட்சிகளில் அவர் இருந்துள்ளார். பாமகவில் இருந்தார், அதிமுக பக்கம் போனார்.. நாம் தமிழர் கட்சியில் இணைந்தார்.. அவராக போவார், அவராகவே திரும்பி வந்து விடுவார்.

இப்போது புதிய கட்சி, தேசிய அரசியல், கூட்டணி, மாநாடு என்று சீரியஸாக இறங்கி விட்டார்.. எத்தனை தலை உருளப் போகுதோ!